6 மே, 2011

அழுத்தங்கள் எந்த வடிவில் வந்தாலும் தளரமாட்டோம் சர்வதேச குடும்ப சுகாதார தின வைபவத்தில் ஜனாதிபதி

* மனிதாபிமான நடவடிக்கையை ஒழிவு மறைவின்றியே முன்னேடுத்தோம்

* 30 வருடகாலம் பயங்கரவாதத்தினுள் சிக்கியிருந்த மக்களை மீட்டது குற்றமா?



மனித உரிமைகளைப் பாதுகாத்தவாறு முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு எதிரான, உலகின் அழுத்தங்களைக் கண்டு நாம் ஒருபோதும் தளர்வடைய மாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று தெரிவித்தார்.

முப்பது வருடங்கள் நீடித்த பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து, அழிவுகளை நிறுத்தி, அங்கு சிக்கியிருந்த அப்பாவி மக்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவித்து, நாட்டில் அச்சம், பீதியின்றி சுதந்திரமாகக் வாழக்கூடிய சூழல் எம்மால் ஏற்படுத்தப்பட்டிருப்பதை குற்றமாக்கிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதென்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார்.

சர்வதேச குடும்ப சுகாதார தின ஞாபகார்த்த வைபவம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

பாதுகாப்பான தாய்மைக்காக செயற்திறன்மிக்க குடும்ப சுகாதார சேவை என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உரையாற்று கையில், பொதுவாக இன்று முழு நாடும் உலகின் பல விதமான அழுத்தங்களுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கும் நேரமிது. நாம் 30 வருட கால யுத்தத்தை முழுமையாக ஒழித்துக் காட்டியுள்ளோம். இன்று சுதந்திரமாக நடமாட முடிகின்றது. அச்சம், பீதியின்றி வடக்கு, கிழக்கு உட்பட முழு நாட்டிலும் வாழக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

யுத்தம் லட்சக்கணக்கான இளைஞர், யுவதிகளின் உயிர்களை காவு கொண்டுள்ளது. வடக்கென்றாலும், தெற்கென்றாலும் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பெடுக்கவிருந்த இந்நாட்டுப் பிரஜைகளையே நாம் இழந்துள்ளோம். இப்படியான அழிவையே நாம் நிறுத்தியுள்ளோம். முப்பது வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தை நாம் பதவிக்கு வந்ததும் குறுகிய காலத்தில் அதனை முழுமையாக முடித்தோம். நாம் நாட்டுக்கும், மக்களுக்கும் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளோம்.

இது நாட்டை அபிவிருத்திப் பாதை யில் நகர்த்திக்கொண்டிருக்கும் சந்தர்ப்பம். முப்பது வருடங்கள் பின்தங்கியுள்ள நாட்டை துரிதமாக முன்னேற்ற வேண்டிய தேவை எம்முன்னால் உள்ளது. அந்த அபிவிருத்தி பாதையில் பயணிக்க வேண்டியது எமது பொறுப்பாகும். அபிவிருத்தி அடையாத பிரதேசங்களையும், யுத்தம் காரணமாக அழிவுற்றுள்ள உட்கட்டமைப்பு வசதிகளையும் துரிதமாக மீளக்கட்டியெழுப்புவதற்காக கோடிக்கணக்கான ரூபாவை ஒதுக்கி செலவிட்டு வருகின்றோம்.

பாதை தவறிய இளைஞர், யுவதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து வருகின்றோம். இப்படியான நிலையில் எமக்கு சாட்சியமில்லாமல் குற்றப்பத்திரிகையொன்று முன்வைக்கப்படுகின்றது. அதில் எம்மை போர்க்குற்றவாளிகளாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டை விடுவிக்க முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க சிலர் துணை புரிகின்றனர். 1987-1990 காலப்பகுதியில் தென் பகுதியில் நகரத்திற்கு நகரம், கிராமத்திற்குக் கிராமம், வீதிக்கு வீதி டயர்களில் இளைஞர்கள் எரிக்கப்பட்டார்கள்.

வரலாற்றில் இப்படியான நிலமை ஒரு போதுமே ஏற்படவில்லை. நாம் குரூர பயங்கரவாதத்தை ஒழிக்கும் போது இப்படியான நிலமை ஏற்படவில்லை. நேருக்கு நேர் போராடி பெரிய பயங்கரவாதியை ஒழிப்பதற்கு எமது படையினர் மேற்கொண்ட போராட்டம் இன்று தவறாக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளிடம் சிக்குண்டிருந்த லட்சக்கணக்கான மக்களை விடுவித்தமை மற்றும் பயங்கரவாத அழிவுகளை நிறுத்தியமை என்பவற்றை குற்றமாக்கி விட இன்று முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இன்று சிலர் அற்பத்தனமாக சிந்தித்து அற்ப அரசியல் லாபம் பெற்றுக் கொள்ளும் வகையில் வெவ்வேறு விதமான அறிக்கைகளை அனுப்புகிறார்கள். இன்னும் சிலர் டொலர்களுக்காகவும், அரசியல் நலன்களுக்காகவும் அறிக்கைகள் அனுப்புகிறார்கள். இவற்றின் விளைவுகளுக்கே நாம் இன்று முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

என்றாலும் இவற்றுக்காக நாம் தளர்வடைய மாட்டேம். எமக்குப் பொறுப்புள்ளது. இச்சந்தர்ப்பத்தில் எல்லா பேதங்களையும் மறந்து நாட்டுக்காக ஒன்றாகக் குரல் கொடுக்க எல்லோரும் ஒன்றுபட்டுள்ளார்கள்.

அதனை நாம் பாராட்டுகின்றோம். அதனால் இப்பிரச்சினைக்கு நாம் முகம் கொடுப்போம். எம்மிடம் கூறுவதற்கு விடயங்கள் உள்ளது. இதனை நாம் இரகசியமாக செய்யவில்லை. நாம் மனித உரிமையைப் பாதுகாத்தபடியே மனிதாபிமான இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தோம். இல்லாவிட்டால் எவ்வளவு வெள்ளைக்கொடிகளை எம்மால் பார்த்திருக்க முடியும்.

ஆகவே, நீங்கள் நாட்டின் மீது பற்றுக் கொண்டு செயற்படுபவர்கள். உங்களால் பிரசவிக்கப்படுகின்ற குழந்தைகள் நல்ல போஷாக்குமிக்கவர்களாகவும், நாட்டுக்குப் பங்களிப்பு செய்யக் கூடியவர்களாகவும் திகழ பணியாற்றுங்கள்.

எமது நாட்டில் குடும்ப சுகாதார சேவை 1929ம் ஆண்டில் ஆரம்பமானது. அந்த வகையில், மருத்துவ மாதுகள் சேவைகளுக்கு இந்நாட்டில் நீண்ட வரலாறு உள்ளது.

அன்று பெண்மணியொரு வர் கர்ப்பம் தரித்தால் அப்பெண் குழந் தையை பிரசவிக்கும் வரையும் அவருக்குரிய சகல சேவைகளையும் செய்து கொடுப்பதை மருத்துவ மாதுகள் தமது பொறுப்பாகக் கருதி செயற்பட்டனர். இதனடிப்படையில் கர்ப்பிணிகளை மருத்துவ மாதுகள் அடிக்கடி கண்காணித்து வந்தனர். அவர் களது வீடுகளுக்கு இவர்கள் ஒவ்வொரு நாளும் செல்லக்கூடியவர்களாக இருந்தனர்.

அன்றைய காலத்தில் கர்ப்பிணி பெண்களின் விடயத்தில் டொக்டர்களை விடவும் மருத்துவ மாதுகளே அதிக கரிசனை காட்டினர். குழந்தைகளை ஆரோக்கியமானவர்களாகப் பிரசவிக்கச் செய்வதில் இவர்கள் தீவிர கரிசனை காட்டினர். நான் மாத்தறை, பாலட்டுவவில் தான் பிறந்தேன். எமது கிராமத்திற்கு அருகிலுள்ள கிராமத்தில் தான் டொக்டர் விக்கிரமசிங்க இருந்தார். என்றாலும் எமக்கும் டொக்டரை விடவும் மருத்துவமாது தான் அதிக சேவை செய்துள்ளார்.

மருத்துவ மாதுகளின் சேவை மிகவும் கெளரவமானது. பெறுமதிமிக்கது. அன்று உங்களுக்கு கிராமத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. நீங்கள் பொற்றுக் கொண்ட அனுபவம் எமது குழந்தைகளைப் பாதுகாப்பதற்குப் பெரிதும் உதவியது.

எமது குடும்ப சுகாதார உத்தியோகத்தர் ஒருவர் ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் சிறந்த சேவையாளர்களில் ஒருவருக்கான விருதைப் பெற்றுள்ளார். இன்று நாம் அந்த நிலைக்கு வளர்ந்துள்ளோம்.

எமது நாட்டில் தாய் சேய் உயிரிழப்பு பெரிதும் குறைந்துள்ளது. இவை அனைத்தும் உங்களது சேவையின் பலனாக இந்நாடு பெற்றிருக்கும் நன்மைகள் கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீடுகள் தொடர்பாகவும் உங்களுக்குப் புரிந்துணர்வுள்ளது. உங்களது சேவை குறித்து மக்கள் மத்தியில் நல்ல நம்பிக்கை இருக்கின்றது. அதனால் நாமும் சமூகமும் உங்களது சேவையைப் பாராட்டுகின்றோம்.

இதே வேளை குழந்தைகள் குறித்து பேசுகின்ற நாம் மந்த போஷாக்கு குறித்தும் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். மந்த போஷாக்கை ஒழிப்பது எமது பொறுப்பாகும். இதன்படி குழந்தைகளுக்குப் போஷாக்கான உணவைப் பெற்றுக் கொடுப்பதும எமது கடமையாகும்.

இந்நாட்டில் மந்த போஷாக்கு குறித்து பேசப்படுவதற்கு தவறான உணவுப் பழக்க வழங்கங்கள் தான் காரணம். என்றாலும் எமது நாட்டில் மந்த போஷாக்கு நிலையை போக்குவதற்கு பயிரிடுவோம். நாட்டைக் கட்டியெழுப்புவோம், திவிநெகும குடும்ப பொருளாதார அலகுத் திட்டம் என்பன பெரிதும் உதவும். இத்திட்டங்களை ஊக்குவிப்பதற்கு நீங்களும் பங்களிப்பு செய்யுங்கள். உங்களது ஆலோசனைகளை கிராம மக்கள் பெரிதும கேட்பார்கள். அது குழந்தைகளுக்கு போஷாக்குமிக்க உணவுகள் கிடைக்க பெரிதும் உதவும் என்றார்.

இந்நிகழ்வில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, மேல் மாகாண ஆளுனர் அலவி மெளலானா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக