8 டிசம்பர், 2010

1983 ஜூலை 25 மற்றும் 27இல் கொழும்பு வெலிக்கடைச் சிறை,

1983 ஜூலை 25 மற்றும் 27இல் கொழும்பு வெலிக்கடைச் சிறை, ஈழத்தின் தமிழர்களுக்கு மறந்துவிட முடியாத பாடம் ஒன்றினைப் புகட்டியது. அரசாங்கமும் அதிகாரிகளும் இணைந்து நிறைவேற்றிய இந்தப் படுகொலைகள் தமிழர்கள் தனித்தே வாழவேண்டும் என்பதனை உறுதிப்படுத்தியது.

24 ஜூலை இரவு 12மணிக்கு சற்று மேலாக வெலிக்கடையின் முக்கிய வாயில் பகுதியிலிருந்து மக்களது கூச்சலிடும் சத்தமானது எங்களைத் தட்டி எழுப்பியது. விழித்துக்கொண்ட நாம் காவலுக்கு நின்றவரை அழைத்து “என்ன சத்தம்” கேட்கிறது என்று கேட்டதற்கு அப்படி ஒன்றும் இல்லையே, அது சும்மா என்று நழுவி விட்டார். அந்தச் சத்தத்தைத் தொடர்ந்து வானத்தை நோக்கி சுடப்பட்ட துப்பாக்கி வேட்டுக்களும் கேட்டன. எங்கள் எவருக்குமே என்ன நிகழ்வென்பது தெரியாது.

25 ஆம் திகதி காலை பத்துமணியளவில் பெரும் புகையானது எங்கள் சிறை ஜன்னல் வழியாக தெரியத் தொடங்கியது. அப்போதுதான் எம்மவர் பரபரப்படைந்தனர். சப்பல் வார்ட்((chapel ward)) என்று அழைக்கப்பட்ட தரைத் தளத்தின் “பி” பிரிவில் தண்டிக்கப்படாத விடுதலைப் போராளிகள் 27பேரும். “டி” பிரிவில் தண்டிக்கப்பட்ட மற்றும் விசாரணை முடிவடையாத மொத்தம் 35 பேருமாக மொத்தம் 52பேர் அன்றைய தினம் சிறையின் அறைகளில் அடைக்கப்பட்டிருந்தோம்.

“டி” பகுதியில் திருவாளர். குட்டிமணி. தங்கத்துரை உட்பட 35பேரும் இரு;நதனர். எங்களை தினமும் காலை பத்தரை மணியளவில் சூரிய வெளிச்சம் படுவதற்காக அரை மணிநேரம், முள் கம்பிகளால் பத்து அடி உயரத்துக்கு பாதுகாக்கப்பட்ட பகுதி ஒன்றுக்கு அழைத்துச் செல்வர்.

அன்றைய தினமான ஜூலை 25ம் நாள் காலை பத்துமணிக்கே “டி” பிரிவு போராளிகளை அழைத்துச் சென்றிருந்தனர் அதிகாரிகள். பத்தரை மணியளவில் எங்கள் பகுதியினரை அழைத்தச் சென்றனர். திருவாளர். குட்டிமணியும் ஏனையோரும் அவசர அவசரமாக அதிகாரிகளால் அவர்களது அறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்தவேளை, நண்பர் குட்டிமணி எனது அருகில் வந்து யாழ்ப்பாணத்தில் 13 ஆமிக்காரரை சுட்டுக் கொன்று விட்டார்களாம். அதனால் கொழும்பில் கலவரமாம் என்று கூறி முடிப்பதற்குள் அதிகாரிகள் அவரை நேரமாகிறது என்று அழைத்துச் சென்றுவிட்டனர்.

இதன் பின்னர்தான் “பி” பகுதியிலிருந்த எமக்கு வெளியில் நடந்தவை பற்றித் தெரியவந்தன. எங்களுக்கு அன்று பத்து நிமிடங்கள்தான் கொடுத்திருப்பார்கள் வெய்யிலில் நிற்பதற்கு, உடனே அறைகளுக்கு திரும்பிச் செல்லுமாறு உத்தரவிடடனர் அதிகாரிகள். எதற்காக எங்களை அவசரப்படுத்துகிறார்கள் என்பது புரியவில்லை. சிறை மதில்களுக்கப்பால் நாலாபுறமும் புகை மண்டலங்களாகக் காட்சியளித்தது. இது இப்படி அது அப்படி என்று எமக்குள்ளாக கருத்து பறிமாற்றங்கள் ஆனால். வேளியில் நடப்பவைப் பற்றி உண்மை எதுவும் தெரியாது.

பகல் ஒன்று முப்பது மணிக்கு உணவுக்குப் பின் அடைக்கப்பட்ட அறைகளின் இரும்புக் கம்பிகளில் சாய்ந்தபடி வெளியில் நடப்பவை பற்றிய கற்பனையில் மூழ்கியிருந்தோம். எங்கள் அறைகளானது 8அடி நீளம் 6 அடி அகலம் கொண்டது. ஒவ்வொருவரும் தனித் தனி அறைகளில் அடைக்கப்பட்டிருந்தோம்.

பிற்பகல் இரண்டுக்கும் இரண்டு முப்பது மணிக்கும் இடையில் பெருந்திரளான மக்கள் கூடி கூச்சலிடும் சத்தம் கேட்டது. திகைத்து எழுந்து நின்று காதுகளைக் கூர்மையாக்கி இரும்புக் கம்பிகளினூடே செலுத்தினர் ஒவ்வொருவரும். அந்தக் கூச்சல் அனைவரையும் மிரளவைத்தது. இப்படி ஓர் கூச்சலை எங்கள் வாழ்நாளில் கேட்டிருக்கவில்லை. ஏனெனில் அன்றைய வெலிக்கடைச் சிறையின் மொத்தக் கைதிகள் இரண்டாயிரம். இவர்கள் அனைவரும் ஆவேசத்துடன் ஆத்திரம் கொண்டு எங்கள் சிறைக் கொட்டடியை நோக்கி நகர்கின்றனர்.

இந்தச் சிங்களக் கைதிகள் அனைவரும் தண்டிக்கப்பட்டக் கைதிகள். விடுதலையோ அரசியல் நோக்கமோ இவர்களுக்குக் கிடையாது. பலதரப்பட்ட குற்றச் செயல்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் இவர்கள். அரச இராணுவத்தினரால் தூண்டப்பட்டு “சிங்கள ஜனதாவ ஜயவேவா” (சிங்கள் மக்கள் வாழ்க) என்று முழங்கிக் கொண்டு குட்டிமணி ஜெகன் ஆகியோர் தங்கியிருந்த “டி” பிரிவுக்குள் செம்மறி ஆட்டுக் கூட்டம் போல் இடிபட்டுக்கொண்டு நுழைந்தனர்.

கைகளில் கொலைக் கருவிகள்! வேலிக்கடைச் சிறை பலதரப்பட்ட தொழற்சாலைகளைக் கொண்டது. அந்தத் தொழிற்சாலைகளுக்குள் இருந்த கருக்கான கோடாலி, கத்தி, கடப்பாரை, சுத்தியல், இரும்பிக் கம்பிகள், நீழமான சாவிகள், மரக்கட்டைகள், மரமறுக்கும் உடைந்த வாள்கள், அடுப்பெரிக்கும் விறகு கட்டைகள் என்று சிங்களக் குற்றவாளிகள் படை கையிலேந்திக் கொண்டு புகுந்தது.

திருவாளர். குட்டிமணி தங்கியிருந்த பகுதிக்குள் புகுந்த அந்தக் காடையர் படை ஒவ்வொரு அறையாகத் திறந்து, உள்ளே புகுந்து தங்கள் ஆயுதங்களால் எம்மவரைக் கொன்றனர். வெறுங்கையுடன் ஒவ்வொருவர் ஒரு அறையில், இரண்டாயிரம் சிங்களக் காடையர்கள், கதவுகளின் திறப்புகள் அவர்களது கையில், பேரிரைச்சல், இந்தக் கூட்டத்தை வெறுங்ககையுடன் எந்த வீரனால் தாக்குப்பிடிக்கமுடியும்.

ஒவ்வொரு சிங்களவரின் ஆயுதமும் “டி” பிரிவிலிருந்த 35 பேரையும் தாக்கியது. இறந்து கிடந்த எம்மவர்களை முறைவைத்து அந்தக் காடையர்கள் தாக்கினர். மதியம் 2 மணி முதல் பிற்பகல் நாலே முக்கால் மணிவரை இந்த இரண்டாயிரம் பேரும் எங்கள் இனத்தவரின் சதைகளை கழுகுகள் போன்று பிய்த்தெடுத்தனர்.

இறுதியாக ஐந்து மணியளவில் சிறையின் அதிபர் (சுப்ரின்டென்ட்) சப்பல் வார்டின் மத்திய பகுதிக்கு வந்தார். அதன் முதலாவது மாடியில் ஏறி நின்று சிங்களக் கைதிகளை நோக்கி சிங்களத்தில் உரை ஒன்று நிகழ்த்தினார். அவ்வுரை பின்வருமாறு:

நீங்கள் எங்கள் மக்களது உணர்வுகளைப் பிரதிபலித்துள்ளீர்கள். எங்களது இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு நாங்கள் சரியான பதில் கொடுத்துள்ளோம். இவர்கள், (நண்பர் குட்டிமணி இருந்த பகுதியான வலப்புறத்தைக் காண்பித்து) கொலைகாரர்கள், எங்கள் இனத்தவரைக் கொன்றாலும், இராணுவத்தினரைக் கொன்றாலும் நாங்கள் அவற்றுக்குத் தக்கபதிலடி கொடுப்போம்.

இன்றைய தினம் எங்கள் சரித்திரத்தில் முக்கியமான நாள், எங்கள் இனமும் இளைஞர்களும் நினைத்ததை நீங்கள் செய்து முடித்துள்ளீர்கள். உங்களது இந்த உணர்வுபூர்வமான யுத்தத்துக்கு நான் தலை வணங்குகிறேன். உங்களது உணர்வுகளை நான் மதிக்கிறேன். இந்த நாடு சிங்கள இனத்துக்கு உரியது என்பதனை நீங்கள் ஏனையோருக்கு உணர்த்தியுள்ளீர்கள். நீங்கள் இதுவரை செய்தது போதும், இந்தப் பகுதியினை (நாம் இருந்த பகுதியினை இடது கை மூலம் காண்பித்து) பிறகு பார்த்துக் கொள்வோம். ஆதலால் நீங்கள் அனைவரும் அமைதியாக உங்கள் உங்கள் பகுதிகளுக்குச் செல்லலாம் என்று கூறி முடித்தார்.

சிங்களக் கைதிகள் தங்கள் கைகளிலிருந்த ஆயுதங்களுடன் எங்கள் அறைகளைப்பார்த்து முறைத்தபடி வெளியே இருந்த அரச மரத்தடியை நோக்கி நகர்ந்தனர். அவர்கள் கொண்டு சென்ற கருவிகளில் எங்கள் இனத்தவரின் இரத்தக்கறைகள் படிந்திருந்தன.

சிறை அதிபர் அனைவரையும் விலக்கிக் கொண்டு சிறைவாசலை அடைந்தார். சிறிது நேரத்தில் சிறையின் முக்கிய வாசல் கதவு திறக்கப்பட்டது. ஓர் இசுசு லொறி உள்ளே நுழைந்தது. அரச மரத்தைச் சுற்றி வந்த அந்த லொறி எங்கள் சப்பல் வார்டைப் பார்த்து திரும்பி நின்று கொண்டது.

மீண்டும் சிங்களக் கைதிகள் உள்ளே நுழைந்தனர். எங்கள் போராளிகளின் உடல்களை நான்கு பேர் வீதம் இரண்டு கைகளுக்கும் இரண்டு பேர், இரண்டு கால்களுக்கும் இரண்டு பேர் என்று தூக்கிக்கொண்டு வந்து லொறியின் பின்புறத்தில் நின்று கொண்டு, இறந்த எங்கள் இனத்தவரின் உடல்களை முன்னும் பின்னுமாக ஆட்டி, வேகம் அதிகரித்ததும் வீசி எறிந்தனர் லொறியின் உள்பகுதிக்குள்.

அரச மரத்தின் கீழ் நின்ற லொறியினுள் எங்கள் இளைஞர்கள் இவ்விதமாக நிரப்பப்பட்டனர். இந்த இறந்த உடல்களுக்குள் ஒருவர் உயிருடன் இருந்தார். குவிக்கப்பட்ட அவர்களுள் எழுந்திருக்க ஒருவர் முயற்சிப்பதைக் கண்ட சிங்கள கைதி ஒருவர் மீண்டும் லொறியினுள் ஏறி ஏனைய உடல்கள் மீது நின்று கொண்டு எழுந்திருக்க முயற்சித்தவரது தலையில் ஓங்கி தன் கையிலிருந்த கோடாலியினால் கொத்தினார். தலை இரண்டாகப் பிளந்து மீண்டும் சரிந்தது தமிழரது உடல் பினமாக.

வீரசாகசம் புரிந்தவர் போன்று குதித்தார் அந்தக் காடையர். லொறியைச் சுற்றி பெருங்கூட்டம். இந்தக் கூட்டத்தினூடே மயில் வாகனன் என்ற சிறுவன் தென்பட்டான்.

அச் சிறுவன் குட்டிமணி அவர்கள் இருந்த “டி” வார்டில் அடைக்கப்பட்டிருந்தான். அன்றைய எங்கள் இயக்கமான புளொட் இயக்கத்தைச் சேர்ந்தவன்தான் சிறுவன் மயில்வாகனன். (வயது 16). “டி” வார்டில் கூட்டம் அதிகரித்ததால் கதவு திறக்கப்படும் போது மறைந்து நின்று கூட்டத்தோடு கூட்டமாக வெளியே வந்து அரச மரத்தடியில் நின்று கொண்டிருந்தான். சிங்களக் கைதிகளுக்கு அவனைத் தெரியாது.

ஆனால், “டி” வார்டில் காவலுக்கு நின்ற சிறை அதிகாரி சிறுவன் மயில் வாகனனைக் கண்டு கொண்டார். ஓடிச் சென்ற அந்தக் காவலாளி சிங்களக் கைதி ஒருவரின் கையிலிருந்த கத்தி ஒன்றினைப் பறித்து மயில் வாகனனது தலைமயிரைப் பிடித்து முன்னோக்கி இழுத்துக் கொண்டு ஓங்கி அவனது வயிற்றில் பல முறைக் குத்தினார். மயில் வாகனன் தரையில் வீழ்ந்தான். காவலாளி வீரநடை போட அவரை சிங்களக் கைதிகள் தோள்மீது தூக்கி “ஜெயவேவா” என்று கோசமிட்டனர்.

பின்னர் மயில் வாகனனும் லொறியினுள் தூக்கி வீசப்பட்டான்.

நீண்ட நேரம் காத்திருந்த அந்த லொறி இரவு சுமார் ஏழு மணியளவில் மீண்டும் முக்கிய வாயில் வழியாக வெளியேறியது. எமக்கு அருகிலிருந்த எங்கள் போராளிகள் பிணக்குவியலாக, நாசிகளின் கூடாரத்தை விட்டு சவக்குளிகளுக்குச் சென்றது போல் கொண்டு செல்லப்பட்டது.

நடந்து முடிந்த சம்பவங்கள் அனைத்தையும் “பி” வார்டின் முதல் செல்லிருந்த நானும் எனக்கு எதிர்புறம் இருந்த சிவ சுப்பிரமணியம் அவர்களும் நேரடியாகவும் ஜன்னல் வழியாகவும் அவதானித்துக் கொண்டிருந்தோம். இதே போன்று அரசமரப் பகுதியின் பக்கமாக இருந்த ஜன்னல் வழியாகவும் எங்களில் சிலரும் இவற்றினைக் கண்டு ஒருவருக்கொருவர் செய்திகளைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

இப்போது நேரம் இரவு ஒன்பது முப்பது மணி ஆகிவிட்டது. அனைவரும் விழி பிதுங்க அடுத்த நிகழ்வுக்காக காத்திருந்தோம். “பி” வார்டின் கதவு திறக்கப்பட்டது. இரண்டு மூன்று கறுத்தக் கோட் அணிந்தவர்கள் சிறை அதிகாரிகளுடன் பதுங்கிப் பதுங்கி நுழைந்தனர். 28 அறைகள் கொண்ட எங்கள் பகுதியை சற்றுத் தள்ளி நின்றே ஒரு நோட்டம் விட்டனர்.

எனது அறையின் முன் வந்து நின்ற கறுத்த கோட் அணிந்தவர் தன்னை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“நான் முதன்மை நீதிபதி, இங்கு நடைபெற்ற சம்பவங்கள் பற்றி நீங்கள் சாட்சி சொல்ல விரும்புகிறீர்களா? என்றார். ஆம், நான் சாட்சி சொல்ல விரும்புகிறேன் என்றேன். எனது அறையைச் சைகையினால் காண்பித்த நீதிபதி, முதன்மை ஜெயிலரிடம் திறக்கும்படி கூறிவிட்டு, ஒவ்வொரு அறையாகச் சென்று சாட்சி சொல்ல விரும்புகிறீர்களா? என்று கேட்டுக் கொண்டு மீண்டும் எனது அறை முன்பு வந்து நின்றார்.

எனது அறை திறக்கப்பட்டது. நான் வெளியில் வந்தபோது, தம்பாபிள்ளை மகேஸ்வரன் அவர்களும் தானும் சாட்சியம் சொல்ல வேண்டும் என்று கூறினார். முதலில் கேட்கும் போது பேசாமல் இருந்துவிட்டு இப்போது எதற்காக என்று கோபித்த ஜெயிலரைக் கவனித்த முதன்மை நீதிபதி அவரையும் அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.

எங்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு முதன்மை ஜெயிலரது அலுவலகத்துக்குச் சென்றனர். வாசலில் போடப்பட்டிருந்த வாங்கில் அமரும்படி கூறினர். சரியாக இரவு பத்து முப்பது மணியளவில் எனது பெயரைச் சொல்லி உள்ளே அழைத்தனர்.

உள்ளே பெரிய மேசை ஒன்று போடப்பட்டிருந்தது. மறுமுனையில் முதன்மை நீதிபதியும் தட்டெழுத்தாளரும் இருக்க, எதிர் முனையில் எனக்கென ஓர் நாற்காலி இருந்தது. அதனைச் சைகையின் மூலம் காட்டி அமரும்படி சொன்னார் நீதிபதி. நானும் அமர்ந்து கொண்டு மேசையின் இருபுறமும் அமர்ந்திருந்தவர்களைக் கவணித்தேன். வெள்ளை உடையில் அமர்ந்திருந்த நபரை எங்கோ பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. கிரகித்துக் கொண்டேன். அவர்தான் திருவாளர் குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு தூக்குத் தண்டனை கொடுக்கவேண்டும் என்று நீதி மன்றத்தில் வாதாடிய அரசு தரப்பு சட்டத்தரணி “திலக் மாறப்பன”. அவருக்கு அருகில் முதன்மை ஜெயிலரும் அவர்களின் எதிர் புறத்தில் சிறையின் அதிபரும் இருந்தனர்.

நீதிபதி என்னைப் பார்த்து வாக்கு மூலத்தை ஆரம்பிக்கலாமா? என்று கேட்டார். மாறப்பனயைப் பார்த்து, “இவரை முதலில் வெளியில் அனுப்புங்கள்” என்று கூறினேன். நீதிபதி அவரைப் பார்த்தார், அவர் எதுவும் பேசாமல் வெளியே சென்றார். மீண்டும் நான் முதன்மை ஜெயிலரையும், சிறை அதிகாரியையும் பார்த்தேன். விளங்கிக் கொண்ட நீதிபதி, அவர்கள் இருவரையும் வெளியே செல்லும்படி கூறினார். அவர்களும் வெளியே சென்று விட்டனர். இப்போது நீதிபதியும் தட்டெழுத்தாளரும்தான் அந்த அலுவலகத்தில் இருந்தோம். மீண்டும் என்னைப் பார்த்த நீதிபதி “இப்போது ஆரம்பிக்கலாமா” என்றார்.

சாட்சியை ஆரம்பிக்கலாமா என்று கேட்ட நீதிபதியிடம், நான் நிதானமாகக் கூறினேன். தாங்கள் எங்களது “பி” வார்டின் மேற்பகுதியினைப் பார்த்தீர்கள். கொலையாளிகள் எங்கள் பகுதியையும் உடைத்து உள்ளே நுழைய முனைந்தார்கள். அதன் அடையாளங்கள் அங்கே இருந்தன. நான் சாட்சியம் சொல்லிவிட்டு, அதே பகுதிக்குச் சென்றால் இதே கொலையாளிகள் மீண்டும் எங்கள் பகுதிக்குள் புகுந்து இதே போன்ற படுகொலைகளைச் செய்யலாம்.

எனவே, எங்கள் அனைவரையும் வேறு சிறைச் சாலைக்கு மாற்றினால் நான் சாட்சியம் சொல்கிறேன் என்று ஆணித் தரமாகக் கூறினேன். சற்று யோசித்த நீதிபதி நீங்கள் சொல்வதிலும் நியாயம் உண்டு. ஆனால் சிறைமாற்றம் என்பது என்னால் செய்ய முடியாது. இப்பிரச்சினையை நான் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவிடம் எடுத்துச் சொல்லி விரைவில் மாற்றம் செய்கிறேன் என்று கூறியவர் எழுந்து சென்று முதன்மை ஜெயிலரை அழைத்தார்.

உள்ளே வந்த முதன்மை ஜெயிலரிடத்து சிறை வளாகத்தில் வேறு தனியான இடம் இருக்கிறதா என்று விசாரித்தார். அதற்குப் பதிலளித்த ஜெயிலர் செக்கிறிகேசன் (நடீகிஙுடீகிஹசிடுச்டூ) பகுதி இருக்கிறது அதனைப் பயன்படுத்தலாம் என்றார்.

என்னைப் பார்த்த நீதிபதி, உங்களை இப்போது இருக்கும் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு இன்று இரவே மாற்றுகிறோம் என்றதும், இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக “தாங்கள் உறுதியளித்தால் நான் சாட்சியம் தருகிறேன்: என்றேன்.

ஜெயிலரை வெளியில் அனுப்பிவிட்டு, எனது பெயர் முகவரியினை தட்டச்சில் பதிவு செய்து கொண்டு முதல் கேள்வியினைக் கேட்டார் நீதிபதி: நீங்கள் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்தீர்களா? ஆம் என்றும் சொல்ல முடியாது இல்லை என்றும் சொல்ல முடியாத நிலையில், இல்லை என்று சொன்னால் சாட்சியம் செல்லாது என்று எடுத்த எடுப்பிலேயே விசாரணையை முடித்துவிடுவார்கள் என்று நினைத்த நான் “ஆம் பார்த்தேன்” என்று பதில் கூறினேன்.

“டி” பகுதியில் இருந்தவர்கள் எப்படிக் கொல்லப்பட்டார்கள் என்பது நேரிடையாக நாம் யாரும் பார்த்ததில்லை. அதே வேளை எங்களுக்கு ஐம்பதடி தொலைவில், ஆயுதங்களுடன் புகுந்து இரண்டாயிரம் பேர் சேர்ந்து அடித்துக் கொலை செய்துவிட்டு, இரத்தக் கரையுடன் கோசமிட்டுச் செல்வதையும் எம் இனத்தவர் இரத்தத்தால் குழிப்பாட்டப்பட்டு அடையாளம் தெரியாத அளவு லொறியினுள் தூக்கி வீசப்படுவதைப் பார்த்த நாம் எப்படி எம்மவருக்காக சாட்சியம் சொல்லாதிருப்பது என்ற அடிப்படையில்தான் நான் சாட்சியம் சொல்ல முன்வந்தேன்.

அதே வேளை, நாங்கள் இருந்த பகுதியில் தொடர்ந்தும் இருந்தால் மீண்டும் நாமும் கொல்லப்படுவோம் என்ற அச்சத்தினால் எஞ்சிய எம்மவரை இந்தச் சிறையிலிருந்து வேறு பாதுகாப்பான சிறைக்கு மாற்றவேண்டும். எனவே, சாட்சியம் சொல்வதன் மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்து பயந்து போயிருக்கும் எங்கள் தோழர்களை மீட்டுவிடலாம் என்ற முடிவினாலேயே நான் சாட்சியம் சொல்வது என்று முடிவுசெய்தேன்.

நீதிபதியின் அடுத்தக் கேள்வி, நீங்கள் எவற்றை எல்லாம் பார்த்தீர்கள்?

எண்ணமுடியாத கூட்டம், கைகளில் ஆயுதங்களுடன் நண்பர்கள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்றோர் தங்கியிருந்த “டி” வார்ட் பகுதியினுள் புகுந்ததை நான் நேரில் பார்த்தேன். அவர்களுள் பலரை என்னால் அடையாளம் காட்ட முடியும். ஏறக்குறைய இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக ஆயுதங்களுடன் சென்றவர்கள் உள்ளே புகுந்து சத்தமிட்டுக் கொண்டு தாக்குவதும், பின்னர் இரத்தம் தோய்ந்த ஆயுதங்களுடன் வெளியே வருவதும், வெளியே ஆயுதங்களுடன் காத்திருப்போர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்து அவர்களும் எம்மவர் பிணங்களைத் தாக்கிவிட்டு கோசமிட்டுக் கொண்டு வெளியேறியதை நான் பார்த்தேன்.

நீதிபதி: இவை அனைத்தும் தற்செயலாக நடந்தவைதானே? இல்லை! இவை அனைத்தும் திட்டமிடப்பட்டே நடந்தவை என்றேன். எப்படிச் சொல்கிறீர்கள் என்று நீதிபதி கேட்டார்? நேற்று இரவு சிறைவாசலில் பலர் கோசமிடுவதும், பின்னர் துப்பாக்கிச் சத்தமும் கேட்டது. இந்தச் சம்பவம் எங்களுக்கு எதிராக நடந்தவை என்றே நினைக்கிறேன். அடுத்ததாக, மதிய உணவு வழங்கிய பின் தண்டிக்கப்பட்ட கைதிகள் உட்பட அனைவருமே அவரவர் அறைகளில் அடைக்கப்பட்டு விடுவார்கள். ஆனால், இன்று அப்படி எவரும் அடைக்கப்படவில்லை. உணவு எடுத்துச் சென்றவர்கள் மீண்டும் அரசமரத்தின் கீழ் கூடிநின்றதை நான் பார்த்தேன்.

நீதிபதி, அப்படிக் கூடி நின்றவர்கள் என்ன செய்தார்கள்? அப்படிக் கூடி நின்றவர்கள் மேலும் பலரைத் திரட்டிக்கொண்டு கோசமிட்டபடி நண்பர் குட்டிமணி இருந்த பகுதிக்குள் புகுந்தனர். அந்தக் கூட்டத்தினுள் சிறை அதிகாரிகளும் இருந்தனர். மரத்தின் கீழ் நின்றவர்களுடன் சிறை அதிகாரிகள் கதைத்துக்கொண்டு நின்றதையும் நான் பார்த்தேன். சிறை அதிகாரிகள் அவர்களைத் தடுப்பதற்குப் பதிலாக அவர்களுடன் இணைந்து கோசமிட்டதையும் நான் நேரிடையாகப் பார்த்தேன்.

நீதிபதி:, நீங்கள் அவர்களை அடையாளம் காட்ட முடியுமா? இந்தச் சிறையை விட்டு வேறு சிறைக்கு மாற்றினால் அவர்களை அடையாளம் காட்டமுடியும் என்று கூறினேன்.

நீதிபதி: ழு.மு. இதனைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். நடைபெற்ற சம்பவங்கள் கைதிகளும் காவலாளிகளும் இணைந்து செய்தனர் என்று கூறுகிறீர்களா? ஆம்! மேலதிகாரிகளும் சேர்ந்து செய்தனர் என்றேன்.

நீதிபதி: எப்படிச் சொல்கிறீர்கள்? மேலதிகாரிகள் அனுமதியின்றி சிறைக்காவலர்கள் தாங்களாகவே மதிய உணவுடன் மூடப்படுபவர்களைத் திறந்துவிட முடியாது. மதிய உணவு வழங்கப்பட்டவுடன் சிறை வளாகமே வெறிச்சோடி கிடக்கும். ஆனால், இன்று மதியம் இரண்டு மணியளவிலும் மொத்தச் சிறைக் கைதிகளும் சிறை மைதானத்திலும், அரச மரத்தடியிலும் முதன்மைச் சிறை அதிகாரியின் அலுவலகத்தின் முன்னும் கூடியிருந்தனர். எனவே, மேல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில்தான் இவை நடைபெற்றன.

நீதிபதி: மேல் அதிகாரிகள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? முதன்மை ஜெயிலரும் (இகீடுடீக் ஒஹடுங்ச்ஙு) மற்றும் சிறை அதிபரும் (நசீஙீஙுடுடூசிடீடூக்ஷடீடூசி) என்றேன். நீதிபதி: எப்படி? எம்மவர்கள் கொலை செய்யப்பட்டு முடிந்ததும் சிறை அதிபர் ஆற்றிய உரையினை முழுவதுமாக கூறினேன். மேலும் இந்தச் சம்பவம் நடந்த ஐந்து நிமிடங்களில் ஒரு விமானம் (கெலிகாப்டர்) மிகவும் தாழ்வாக பறந்து கிட்டத்தட்ட ஆறு ஏழு முறை சுற்றி வந்து நடந்தவற்றை அவதானித்துச் சென்றது. எங்களுக்கு, விமானத்தின் ஓசை மிக சத்தமாக கேட்டது. இதிலிருந்து இந்தச் சம்பவம் தற்செயலாக நடந்தது அல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்று கூறினேன். அமைதியாக சிறிது நேரம் யோசனையின் பின் நீதிபதி மீண்டும்.

நீதிபதி: அப்படியாயின் உங்கள் கூற்றுப்படி இவை அனைத்தும் திட்டமிடப்பட்டு மேல் அதிகாரிகளால் நிறைவேற்றப்பட்டவை என்கீறீர்களா? ஆம்! என்றேன்.

நீதிபதி: வேறு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? எஞ்சியுள்ள எங்கள் அனைவருக்கும் இந்தச் சிறையில் பாதுகாப்பு இல்லை எனவே, எங்களைப் பாதுகாப்பான சிறைக்கு மாற்ற வேண்டும். நடந்து முடிந்த சம்பவங்களுக்கும் கொலைகளுக்கும் சரியான முறையில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இவையே நான் சொல்ல விரும்புவது என்று கூறி முடித்தேன் படித்து பார்க்கும் படி கூறி வாக்குமூலத்தின் கீழ் எனது கையெழுத்தைப் பெற்றுக் கொண்டார் நீதிபதி.

பின்னர் சிறை அதிகாரிகளை நீதிபதி அழைத்து, என்னை அழைத்துச் செல்லுமாறும், வெளியில் காத்திருந்த மகேஸ்வரனை உள்ளே அழைத்து வரும்படியும் உத்தரவிட்டார்.

வெளியே சென்ற என்னை மகேஸ்வரன் அவர்கள் இருந்த வாங்கில் இருக்கும் படி கூறி மகேஸ்வரன் அவர்களை விசாரணைக்காக உள்ளே அழைத்துச் சென்றனர். அப்போதைய நேரம் சுமார் இரவு இரண்டு மணியிருக்கும்.

உள்ளே சென்ற மகேஸ்வரன் அவர்கள் பத்து நிமிடங்களில் மீண்டும் வெளியே வந்தார். அவர் அவ்வளவு வேகமாக என்ன வாக்கு மூலம் கொடுத்தார் என்பது எனக்குத் தெரியாது. வெளியே வந்ததும் சற்று முன்னால் மகேஸ்வரன் அவர்களையும், பின்னால் என்னையும் அழைத்துக் கொண்டு ஏறக்குறைய முன்னூறு மீற்றர் தொலைவில் இருக்கும் எங்கள் கொட்டடியை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கும் வேளை,

மகேஸ்வரன் அவர்கள் தன்னருகில் வந்துகொண்டிருக்கும் சிறைக் காவலாளிகளுடன் கதைக்கத் தொடங்கினார். அப்போது ஒரு காவலாளி சிங்களத்தில் கேட்டார். குட்டி மணி பல பேரைக் கொலை செய்துள்ளார். அதனால் அவரைக் கொன்றது சரிதானே என்று மகேஸ்வரனிடத்து கேட்டனர்.

அதற்குப் பதலளித்த மகேஸ்வரன் அவர்கள், குட்டிமணி பலபேரைக் கொன்ற கொலையாளிதான். அவர் கொல்லப்பட்டதில் நான் கவலையடையவில்லை. ஆனால், அவருடன் இருந்த அப்பாவி இளைஞர்கள் கொல்லப்பட்டதுதான் எனக்குக் கவலை என்று பதிலளித்தார். அடுத்த சம்பாசனை ஆரம்பிப்பதற்கு முன்னர் நான் சத்தமாக மகேஸ்வரன் அவர்களை அழைத்து என்ன கதை சொல்கிறீர்கள் என்றேன்!

மகேஸ்வரன் அவர்கள் மௌனமாகிவிட்டார். இந்த வேளையில் தண்டிக்கப்பட்ட கைதிகளின் பகுதி மூடப்படாமல் மேல் தளத்தில் நின்றவர்கள் எங்களைப்பார்த்து சாட்சியா சொல்லிவிட்டு வருகிறீர்கள். உங்களையும் கொல்வோம் என்று ஒன்று சேர்ந்து சத்தம் போட்டனர்.

எங்கள் பகுதிக்கு வந்ததும், எங்கள் தோழர்கள் நடந்தவைபற்றி வினவினர். நடந்தவற்றைக் கூறினேன். சிலர் நின்மதியடைந்தனர். இன்று இரவு வேறு பகுதிக்கு மாற்றிவிடுவார்கள் என்பது அவர்களது திருப்தியாக இருந்தது. மேலும் சிலரோ இது தேவையில்லாத வேலை. எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாத போது எதற்காக சாட்சியம் சொல்ல வேண்டும் என்று சிலர் கூறினர்.

இறந்த எங்கள் சக போராளிகளுக்காக நான் சாட்சியம் சொல்லச் சென்றது தப்பானதோ என்று என்னை எண்ணத் தூண்டியது. இதனால், கேள்வி எழுப்பிய அனைவருக்கும் நான் விளக்கம் கொடுக்கவேண்டியதானது.

நூன் கொடுத்த விளக்கம் பின்வருமாறு இருந்தது: நாங்கள் அனைவரும் விடுதலைக்காகப் போராட முன்வந்தோம். “டி” பகுதியில் இருந்தவர்களும் அதே நோக்கத்துடன் செயல்பட்டுவந்தவர்கள்தான். நாங்கள் வேறு வேறு இயக்களாக இருக்கலாம். நோக்கம் ஒன்றுதான். சக போராளிகள் படுகொலை செய்யப்பட்டு வீழ்ந்து கிடக்கும் போது, நாம் கண்ணால் கண்டவற்றைக் கூட சாட்சியாக சொல்ல முடியாத அளவு பயந்தவர்களாக இருந்தால் நாங்கள் போராடவே வந்திருக்கக் கூடாது. குட்டிமணி ஆட்களின் பகுதிக்குள் நுழைந்ததற்குப் பதிலாக அந்தக் கொலைகாரர்கள் எங்களது பகுதிக்குள் நுழைந்திருந்தால் நாம் யாருமே இப்போது உயிருடன் இருந்திருக்க முடியாது.

நாங்கள் தப்பித்துக் கொள்வதற்காக அவர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர் என்பதே சரியானது. நாங்கள் கண்டவற்றை சாட்சியமாகச் சொல்வதற்கு முன்வரவில்லை என்றால் பிற உலகம் எங்களைப் பற்றி மோசமாக விமர்சிக்கும் எங்கள் இனத்தவருக்காக சிங்களக் காடையரா சாட்சி சொல்லப் போகிறார்கள். சாட்சிகளே இல்லை என்று திசை திருப்பி விடும் சிங்கள அரசு.

எங்களுக்கு உள்ள ஒரே பயம் சிங்களக் கைதிகள் திருப்பியும் தாக்குவார்கள் என்பதுதான். இந்தப் பகுதியிலிருந்து மாற்றுவோம் என்ற உறுதியின் பின்னர்தான் நான் சாட்சியம் சொன்னேன். அதனையும் மீறி தாக்கப்பட்டால் நான் அதனைச் சந்திக்கத்தான் வேண்டும். நேற்றே நாம் இறந்துவிட்டோம் என்று நினைத்துப் பார்த்தால் இனி ஒருதடவை இறப்பதற்குப் பயப்படவேண்டியதில்லை. எந்தப் பிரச்சினை வந்தாலும் அதற்கு முகம் கொடுப்போம் என்று உறுதி எடுத்தால் எவற்றுக்கும் பயப்படவேண்டியதில்லை என்று கதைத்துக்கொண்டிருக்கையில் சிறைக் காவலாளிகள் மிகவும் அவரச அவசரமாக வந்து எங்கள் அறைக்கதவுகளைத் திறந்தனர்.

வரிசையாக, அடுத்தக் கொட்டடியான செக்கிறிகேசனுக்கு நடத்திச் செல்லப்பட்டோம். அங்கே எட்டு அறைகள்தான் இருந்தன. நாம் 27 பேர், ஒவ்வொரு அறையிலும் மூன்று பேராக அடைக்கப்பட்டோம். 24 பேர் போக மேற்கொண்டும் மூன்று பேர் எஞ்சியிருந்தனர். அந்த மூன்று பேரையும் ஒவ்வொரு அறையிலும் அடைத்து மூன்று அறைகளை நால்வர் ஆக்கினர்.

இரவு முழுவதும் யாருக்கும் உறக்கமில்லை எங்களை இந்த எட்டு அறைகளிலும் அடைத்துவிட்டு காவலர்கள் அந்தக் கூட்டத்தின் வாசலில் நின்று கொண்டனர். எங்கள் அறைகளுக்கு தனித்தனி இரும்புக்கம்பிகளாலான கதவுகள் இருந்த போதிலும் இந்த எட்டு அறைகளுக்கும் சேர்த்து ஓர் பொதுவான கம்பிக்கதவும் இருந்தது. அந்தக் கம்பிக்கதவின் அருகேதான் காவலாளிகள் நிற்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக