18 டிசம்பர், 2010

ஆங்கில மொழி மூல ஆசிரியர்கள் 1500 பேருக்கு ஜனவரியில் நியமனம் எம். ஐ. என். நிஸாம்தீன்

தேசிய பாடசாலைகளில் க. பொ. த. உயர்தர வகுப்புகளுக்கு ஆங்கில மொழி மூலமாக கற்பிக்கும் ஆசிரியர்களின் பற்றாக்குறையை நீக்கும் முகமாக எதிர்வரும் ஜனவரி மாதத்தில் பயிற்சி பெற்ற 1500 ஆசிரிய நியமனங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக கடந்தவாரம் க. பொ. த. உயர்தர வகுப்புகளில் கல்வி கற் பிப்பதற்கான 500 ஆங்கில மொழிமூல ஆசிரியர்கள் தேசிய பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஆங்கிலம் மொழி மூலம் கணிதம், வணிகம், கணக் கியல், பெளதீகவியல், இரசாயனவியல் மற்றும் அரசியல் விஞ்ஞானம் ஆகிய பாடங்களை கற் பிப்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக தமக்கு பாடசாலை நிர்வாகத்தினரும், பெற்றோர்களும் செய்த முறைப்பாட்டை அடுத்தே நாம் இந்த தீர்மானத்தை எடுத்தாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஏனைய தமிழ், சிங்கள மொழி மூல பாடசாலைகளில் ஆங்கில மொழி மூல வகுப்புகளை நடத்துவதற்கு தேவையான ஆசிரியர்கள் தேசிய பாடசாலை உட்பட சகல அரசாங்க பாடசாலைகளிலும் போதியளவு இருக்கின்றார்கள் என்று தெரிவித்த அமைச்சர், ஆங்கிலம் மூலம் சகல பாடங்களையும் கற்பிப்பதற்கான ஆசிரியர்களின் பற்றாக்குறையை தமது அமைச்சு விரைவில் பூர்த்தி செய்யும் என்றும் உறுதியளித்தார்.

நாடெங்கிலும் உள்ள அரசாங்க பாடசாலைகளில் தற்போது 42 இலட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். இவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக 225,000 ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக