18 அக்டோபர், 2010

போதைப்பொருளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி நாடெங்கும் பொலிஸ் நிலையங்களுக்கு விசேட பணிப்பு


போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கும் பொருட்டு விசேட நடவடிக்கையை பொலிஸ் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாட்டிலுள்ள 425 பொலிஸ் நிலையங்கள் ஊடாக இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

போதைப் பொருள் ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தை உடனடியாக முன்னெடுக்கத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நாட்டிலுள்ள சகல பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பால சூரிய நேற்று பணிப்புரை விடுத்தார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர் கள், பிரதேசங்களுக்குப் பொறுப் பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 425 பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரிகள் நேற்று கொழும்புக்கு அழைக்கப்பட்டு மேற்படி விசேட வேலைத் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இதன் போதே பொலிஸ் மா அதிபர் மேற்படி பணிப்பை விடுத்தார். கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திலுள்ள கேட்போர் கூடத்தில் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தலைமையில் நேற்றுக்காலை இடம்பெற்ற இந்த உயர் மட்ட மாநாட்டில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான என். கே. இளங்ககோன், காமினி நவரட்ண, கே. பி. பி. பத்திரண, கொழும்பு பிராந் தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச். எம். டி. ஹேரத் உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விசேட நடவடிக்கை பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தலைமையில் நாட்டிலுள்ள 12 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் வழிகாட்டலில் 35 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் கண்காணிப்பின் கீழ் செயற்பட்டு வருகின்றது.

நாட்டிலுள்ள 39 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் மூலம் 425 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஊடாக இந்த விசேட திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. நாட்டில் போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்கள் வெகு விரைவில் இல்லாதொழிக்கப்படும் என்று பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

ஜனாதிபதியினது ஆலோசனையின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களம் விசேட வேலைத்திட்டங்களை தீட்டியுள்ளது.

24 மணி நேரமும் கண்காணிக்கும் பொருட்டு விசேட பொலிஸ் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஹெரோயின், கஞ்சா மற்றும் போதை தரும் லேகியம் போன்ற போதைப் பொருளின் பாவனைகளே இலங்கையில் அதிகம் காணப்படுகின்றன.

போதைப் பொருள் பாவிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு எதுவித பாரபட்சமும் இன்றி இவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடிவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார். போதைப் பொருள் விற்பனை செய்யப்படும் இடங்களும் சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் முற்றுகையிடப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கை வெற்றியடைய குறுகிய காலத்தில் சிறந்த பெறுபேறுகளை காண பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.

சுமார் ஒருவார காலத்தில் உயர் அதிகாரிகளுடன் இது போன்ற சந்திப்பை ஏற்படுத்தி திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர் மாதாந்தம் இந்த திட்ட நடைமுறை தொடர்பாக மீளாய்வுகள் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக