18 அக்டோபர், 2010

புகலிடம் கோருவோர் விடயத்தில் ஆஸி.கடுமையாக நடந்துகொள்ள வேண்டும்:பாதுகாப்புச் செயலாளர்

சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்து புகலிடம் கோருவோரை கையாளும் விடயத்தில் அவுஸ்திரேலியா கடுமையாக நடந்துகொள்ள வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

புகலிடம் கொடுப்பதை நிறுத்தும் பட்சத்தில், இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளிவைப்பது மேலும் இலகுவாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் “ த அவுஸ்திரேலியன்" பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே பாதுகாப்புச் செயலர் இவ்வாறு கூறியுள்ளார். அப்பத்திரிகைக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடற்படையினரும் பொலிஸாரும் கடற்பரப்பில் பாதுகாப்பை பலப்படுத்தியதன் மூலம், புகலிடம் கோருவோரின் படகுகள் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்வதைத் தடுத்துள்ளனர். அண்மைக்காலத்தில் புகலிடம் கோரும் நோக்கில் எவரும் இலங்கையில் இருந்து படகுமூலம் சென்றதான எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லை.

இப்போது, அவ்வாறானவர்கள் மூன்றாவது நாடொன்றுக்கு விமானம் மூலம் பயணம் செய்து, அங்கிருந்தே புறப்பட்டுச் செல்கிறார்கள்.புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் வெளிநாடுகளில் புகலிடம் கோருவதகான காரணம் எதுவுமில்லை. எந்தவொரு அச்சத்தின் காரணமாகவும் எவரும் இலங்கையைவிட்டு வெளியேறுவதற்கான காரணம் இல்லை. அவர்கள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வசிப்பதற்கு சுதந்திரம் உள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் சில குழுக்கள் வேறு அடிப்படைகளில் போராட்டத்தை முன்னெடுக்க முற்படுவது எமக்குத் தெரியும். அவர்கள் வெளிநாடுகளில் மீளஅணிதிரளக்கூடும்.எனவே இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு, தனது புலனாய்வுத்துறையை பயன்படுத்தும் விடயத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கமானது மிகக் கவனமாக செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக