12 அக்டோபர், 2010

சண்டே லீடரில் வெளியான செய்திக்கு பொன்சேகா மறுப்புத் தெரிவிக்கவில்லை பிரெட்ரிகா ஜான்ஸ்




வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பாக, 2009 டிசம்பர் 12ம் திகதி ‘சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான தலைப்புச் செய்திக்கு சரத் பொன்சேகா ஒரு போதும் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்று சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பிரெட்ரிகா ஜான்ஸ் மேல் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ட்ரயல் - அட்-பார் விசாரணையின் போது தெரிவித்தார்.

வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அச்சமயம் பிரதி சட்ட மா அதிபர் வசந்த நவரட்ண பண்டாரவினால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதே ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் இவ்வாறு கூறினார்.

அத்துடன் புலிகள் இயக்க தலைவர்கள் வெள்ளைக் கொடிகளை ஏந்தி வந்த போது கொல்லப்படவில்லை என்றும் யுத்தத்தின் போதே அவர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறும் தெளிவான விளக்கமொன்றை 2009 டிசம்பர் 20ம் திகதி ‘சண்டே லீடர்’ பத்திரிகையில் பிரசுரிக்குமாறு சரத் பொன்சேகா பின்னர் ஒரு தடவை கூறியதாகவும் மங்கள சமரவீர உள்ளிட்ட நண்பர்கள் பலருடன் கலந்துரையாடிய பின்னரே சரத் பொன்சேகா இவ்வாறு தன்னிடம் கூறியதாகவும் பிரெட்ரிகா ஜான்ஸ் குறுக்கு விசாரணையின் போது கூறினார்.

குறிப்பிட்ட தெளிவான விளக்கத்தை பத்திரிகையில் பிரசுரித்த பின் சரத் பொன்சேகாவை தன்னால் தொடர்பு கொள்ள முடியாமற் போனதாக அவர் மேலும் கூறினார்.

விளக்கம் பத்திரிகையில் வெளியானதை யடுத்து ஜே.வி.பி.யினர் தனக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட தாகவும் தனது நற்பெயருக்கு களங்கம் விலைவிக்க முற்பட்டதாகவும் அவர் குறுக்கு விசாரணையின் போது குறிப்பிட்டார்.

வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான கட்டுரை பத்திரிகையில் வெளிவந்ததையடுத்து ஆயிரம் பேருக்கு மேல் அதனைப் பாராட்டியதாகவும் அது தொடர்பாக பி.பி.ஸி கூட தன்னை தொடர்பு கொண்டதாகவும் கூறிய பிரெட்ரிகா ஜான்ஸ் வெள்ளை கொடி விவகாரம் தொடர்பாக தான் எந்தவொரு ஊடகவியலாளர் மாநாட்டிலும் கலந்து கொள்ள வில்லை என்பதுடன் அவ்விடயம் பற்றி பத்தாரிகைச் செய்தி வெளியான பின் ஒரே ஒரு முறை மாத்திரம் சரத் பொன்சேகாவிடம் தான் பேசியதாகவும் குறிப்பிட்டார்.

வழக்கு விசாரணை இன்று காலை 10.30க்கு தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக