12 அக்டோபர், 2010

பொதுநலவாய நிறைவு விழாவில் இலங்கை ஜனாதிபதிக்கு கௌரவமா? : வைகோ கண்டனம்



பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழா நாளை மறுதினம் நடைபெறவிருக்கின்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள மத்திய அரசு இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது :

"71 நாடுகள் கலந்து கொள்ளும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள், தலைநகர் டில்லியில், 70,000 கோடி செலவில் நடத்தப்படுகின்றன.

விழாவைக் கோலாகலமாக ஆரம்பித்து வைக்க, இங்கிலாந்து அரசு குடும்பத்தின் பிரதிநிதியாக, இளவரசர் சார்ள்ஸ், இந்திய அரசால் அழைக்கப்பட்டு, அவரும் பங்கேற்றுத் தொடங்கி வைத்தார்.

நாளை மறுநாள் நடக்கப்போகும் இந்தப்போட்டிகளின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று முடித்து வைக்க, இலங்கை ஜனாதிபதிக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்காக, வரிச்சலுகைகளை ரத்து செய்தது. அனைத்து உலக நாடுகளில் இலங்கையில் நடத்தப்பட்ட கொலைகள் பற்றிய, விழிப்புணர்வு வேகமாக ஏற்பட்டு வருகிறது. எனவே இலங்கை ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்காகவே, இந்த துரோகத்தில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.

தாங்கள் விரும்பியவாறு போரை நடத்திய, இலங்கை அரசுக்கு, உதவவே, இந்திய அரசு இலங்கை ஜனாதிபதியை இந்தியாவுக்கு அழைத்து வந்து, நான்கு நாட்கள் அரசு விருந்தாளியாக ஏற்கனவே உபசரித்தது.

அதே அரசுதான் இன்று பொதுநலவாய விளையாட்டுப் போட்டியை முடித்து வைக்கின்ற கௌரவத்தை அவருக்குக் கொடுத்துள்ளது.

தமிழர்களுக்கு இலங்கை அரசு, கொடுமை செய்யவில்லை என்ற எண்ணத்தை, உலக நாடுகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்ப தற்காகவே, இதை இந்திய அரசு செய்கிறது.

நியூசிலாந்து நாட்டின் தொலைக்காட்சி நிருபர் ஒருவர், டில்லி மாநில முதல்வரை அவமதித்து விட்டதாகக் கூறி, இந்திய அரசு கண்டனம் தெரிவித்ததற்கு நியூசிலாந்து அரசு வருத்தம் தெரிவிக்க நேரிட்டது.

மும்பையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் இந்தியர்கள் கொல்லப் பட்டதற்கு, பாகிஸ்தானோடு போர் தொடுப்போம் என்று, அன்றைய வெளி விவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி மிரட்டல் விடுத்தார்.

தமிழக மீனவர்கள், நமது கடலிலேயே இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், சுட்டுக்கொல்லப் படுவதும் அன்றாடச் சம்பவங்களாகி விட்டன.

அப்படியானால், தமிழர்கள் இந்தியக் குடிமக்களே இல்லையா? வேல் பாய்ந்த இதயத்துக்குள்ளே சூட்டுக்கோலைத் திணிப்பதுபோல, தற்போது, இலங்கை ஜனாதிபதிக்கு, பொதுநலவாய போட்டிகளை முடித்து வைக்கின்ற மரியாதையை வழங்கி உள்ளதற்கு பிரதமர் மன்மோகன்சிங் அரசும், அதனை இயக்குகின்ற தலைமையும், அந்த அரசில் அங்கம்வகிக்கும் கட்சிகளுமே பொறுப்பாளிகளாவர்."

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக