12 அக்டோபர், 2010

ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளின் உயிருடன் விளையாடாதீர்கள்!





ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளின் உயிருடன் விளையாடாதீர்கள்! வன்னியில் சமூகசேவையில் ஈடுபடுபவருடனான நேர்காணல்.

கேள்வி- தடுப்பு முகாம்களில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் விஷயத்தில் தற்போது என்ன நடைபெறுகின்றது? இவர்கள் விடுவிக்கப்படுவதற்கான முயற்சிகள் ஏதாவது நடைபெறுகின்றனவா?

பதில்- கடந்த வருடம் யுத்தம் முடிவுக்கு வந்தபின் தடுத்து வைக்கப்பட்ட ஆயிரக் கணக்கான முன்னாள் போராளிகள் தற்போதும் தடுப்பு முகாம்களில் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் அரசாங்கத்தால் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருவதை நீங்கள் செய்திகளில் பார்த்திருக்கலாம். கடந்த வாரம் பம்பைமடு முகாமிலிருந்து 508 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தடுப்பு முகாம்களிலுள்ள மற்றயவர்களையும் விடுவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கேள்வி- தடுப்பு முகாம்களிலுள்ள போராளிகள் அனைவருமே விடுவிக்கப்படுவது ஏன் தாமதமாகின்றது?

பதில்- இந்தக் கேள்விக்கு துரதிஷ்டவசமானதும் சோகமானதுமான ஒரு பதில் இருக்கிறது. இந்த முன்னாள் போராளிகள் அனைவரும் விரைவில் விடுவிக்கப்படுவதில் இன்றைய சூழ்நிலையில் முக்கிய தடையாக இருப்பது வெளிநாடுகள் சிலவற்றில் மேற்கொள்ளப்படும் சில நடவடிக்கைகள்தான். அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது குறிப்பிட்ட சில தமிழர்கள்தான் என்பதே இங்குள்ள துரதிஷ்டமான விஷயம்.

கேள்வி- புலிகளின் முன்னாள் போராளிகள் விரைவில் விடுவிக்கப்படுவதில் வெளிநாடுகளிலுள்ள சில தமிழர்கள் எப்படித் தடையாக இருக்க முடியும்? அதைக் கொஞ்சம் விரிவாக கூறமுடியுமா?

பதில்- வெளிநாடுகளில் தமிழ் மக்கள் மத்தியில் சிலரால் செய்யப்படும் பிரச்சாரங்களே இந்த முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுவதில் தாமத்த்தையும் தடையையும் ஏற்படுத்துகின்றது.

கேள்வி- நீங்கள் இங்கு குறிப்பிடும் பிரச்சாரங்கள் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் அதன் முன்னாள் போராளிகளுக்கும் எதிராகச் செய்யப்படும் பிரச்சாரங்களா?

பதில்- அப்படியில்லை. அதுதான் இங்குள்ள சோகம். இந்தப் பிரச்சாரங்களைச் செய்பவர்களும் தாங்கள் புலிகளின் ஆதரவாளர்கள் என்பதுபோலத்தான் வெளியே காட்டிக் கொள்கிறார்கள். இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதாகத்தான் வெளியே கூறிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களது திட்டமிட்ட நடவடிக்கைகள்தான் இலங்கையில் நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது.

கேள்வி- நீங்கள் குறிப்பிடுவது எவ்வகையான நடவடிக்கைகளைப் பற்றி?

பதில்- புலம்பெயர் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் கனவுலகில் வைத்திருக்கும் திட்டத்துடன் ஒரு சிலரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைப் பற்றியே இங்கு குறிப்பிடுகிறேன். புலம்பெயர் உறவுகளைக் குழப்பும் நோக்கில் சிலரால் வெளியிடப்படும் சில கருத்துக்கள்தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளில் விடுதலைக்குத் தடையாக இருக்கின்றது. இவர்கள் கூறும் கதைகள் இன்றைய திகதியில் இலங்கையிலுள்ள யதார்த்தமான சூழ்நிலையிலிருந்து வேறுபட்டவை. இரண்டுக்குமிடையே மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் இருப்பதைச் சமீபகாலமாக இலங்கைக்கு வந்து திரும்பிய புலம்பெயர் உறவுகளில் பெரும்பாலானோர் நேரில் கண்டிருக்க முடியும்.

கேள்வி- கதைகள் என்று கூறுகிறீர்கள். எவ்வகையான கதைகள் இவை?

பதில்- விடுதலைப்புலிகளின் தலைவர் மீண்டும் வெளிப்பட்டு படையுடன் வருவார் என்று ஒரு கதை. அந்தக் காட்டில் இத்தனை ஆயிரம் பேர் ஆயுதங்களுடன் தயாராக இருக்கிறார்கள், அல்லது இந்த நாட்டில் இத்தனை ஆயிரம் பேர் பயிற்சி எடுத்தபின் காத்திருக்கிறார்கள் என்று மற்றொரு கதை. இந்த ரீதியில் கூறப்படும் உசுப்பேற்றிவிடும் கதைகள் எவையும் உண்மைக்கு அருகில்கூட இல்லை. ஆனால் இப்படியான கதைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளைத்தான் சிக்கலுக்குள் தள்ளிவிடுகின்றன. இங்கு நான் குறிப்பிடுவது ஓரிருவரை மாத்திரம் பாதிக்கும் விஷயமல்ல, ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளைப் பாதிக்கும் விஷயம். அவர்களது வாழ்க்கையுடன் விளையாடும் விஷயம்.

கேள்வி- இந்தக் கதைகள் முன்னாள் போராளிகளை எப்படிப் பாதிக்கின்றன?

பதில்- இந்த முன்னாள் போராளிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு அவர்கள் தமது இயல்பு வாழ்க்கையைத் தொடரக்கூடிய சாத்தியம் இருக்கின்றது. அதை எவ்வளவு விரைவில் சாத்தியமாக்க முடியுமோ அவ்வளவு விரைவில் செயற்படுத்த முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மறுபுறத்தில் புலம்பெயர் உறவுகள் மத்தியில் சிலரால் வெளியிடப்படும் உண்மைக்கு மாறான அல்லது உசுப்பேற்றி விடும் கருத்துக்கள் தடுப்பு முகாம்களிலுள்ள முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுவதற்கு உலை வைக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாளைக்கே மீண்டும் ஆயுதப் போராட்டம் தொடங்கும் என்று வெளியே சும்மா கதை விட்டுக் கொண்டிருந்தால் எந்தவொரு அரசாங்கம்தான் தமது பிடியிலுள்ள முன்னாள் போராளிகளை விடுவிக்க முன்வரும்? இந்தக் கதைகள் நிச்சயமாக தடை முகாமிலுள்ள போராளிகள் விடுவிக்கப்படுவதில் அரசியல் ரீதியாகத் தாமதங்களை ஏற்படுத்தும். சில வேளைகளில் நிரந்தரமாகத் தடையைக்கூட ஏற்படுத்திவிடக்கூடிய அபாயமும் உள்ளது.

கேள்வி- இப்படியான கதைகளை வெளிநாடுகளில் பரப்பும் ஆட்கள் அதானால் எதைச் சாதிக்க முடியும்? அல்லது எதையாவது சாதிக்க முடியுமா?

பதில்- எதையும் சாதிக்க முடியாது. ஆனால் எல்லாவற்றையும் குழப்பிவிட முடியும். இப்படியான அம்புலிமாமாக் கதைகளை வெளிநாடுகளில் பரப்புவது புலம்பெயர் உறவுகளில் மிகச் சிலரை சிறிது காலத்துக்கு ஒருவித மாயையில் வைத்திருக்க வேண்டுமானால் உதவலாமே தவிர நீண்ட காலத்துக்கு இதேபோல கனவுக் காட்சியைக் காட்டிக்கொண்டிருக்க முடியாது. இதோ வருகிறார் தலைவர், அதோ தொடங்குகிறது மீண்டும் யுத்தம் என்று எவ்வளவு காலத்துக்குத்தான் போக்குக் காட்டிக்கொண்டிருக்க முடியும்? காலப்போக்கில் இவையெல்லாம் பொய் என்பது தெரியவரத்தான் போகின்றது.

கேள்வி- அப்படியானால் இந்தக் கதைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாமே?

பதில்- விட்டுவிடலாம். அதில் சிக்கல் ஏதுமில்லை. சிக்கல் எங்கே வருகின்றதென்றால் இந்தக் கதைகள் பொய் என்று அனைவராலும் உணரப்படும் காலம் வரும்வரை அரசாங்கத்தில் பிடியிலுள்ள முன்னாள் போராளிகளின் விடுதலையும் தள்ளிக்கொண்டு போகும்.
தொடர்ந்தும் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளவர்களில் அநேகர் தாமாக விரும்பியோ, அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளாலோ கடந்த வருடம்வரை ஆயுதப் போராட்டத்தில் இணைக்கப்பட்டிருந்தவர்கள். தற்போது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கின்றது. இதை யார் ஏற்றுக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் நிஜம் அதுதான்.

நீங்களே சொல்லுங்கள்… இனிமேல் நடக்கவே சாத்தியமில்லாத ஒரு ஆயுதப் போராட்டத்துக்காக ஏற்கனவே ஒரு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட இந்த முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் தண்டனை அனுபவிக்க வேண்டுமா?

கேள்வி- இந்த விஷயம் இப்படியான கதைகளை வெளிநாடுகளில் பரப்பிக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியாதா?

பதில்- நிச்சயமாகத் தெரியும். ஆயுதப் போராட்டம் இனியும் சாத்தியமில்லை என்பது யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ, இப்படியான கதைகளை உலாவ விட்டுக் கொண்டிருக்கும் புண்ணியவான்களுக்கு மிக நன்றாகவே தெரியும். அவர் இருக்கிறார் இவர் இருக்கிறார் என்றெல்லாம் வெளியே கூறிக்கொண்டிருக்கும் இவர்களுக்கு அந்த அவர் இவர் யாருமே உயிருடன் இல்லை என்பது மிகத் தெளிவாகத் தெரியும். தனிப்பட்ட முறையில் என்னுடன் பேசும்போது அதை அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருந்தும் தமது சுய அரசியல் விளையாட்டுக்களுக்காக இந்தக் கதைகள் அவர்களால் பரப்பப்படுகின்றன. அப்படியானவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். உங்கள் சுய லாபத்துக்கான நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் தடை முகாம்களில் விடுதலைக்காக்க் காத்திருக்கும் இந்த முன்னாள் போராளிகளில் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்.

அவர்களில் பலர் இனித்தான் தமது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய வயதுகளில் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட அனைவரும் இனித்தான் பூச்சியத்திலிருந்து தமது வாழ்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அவர்களது விடுதலையில் உங்களால் ஏற்படுத்தப்படும் தாமதம் எவ்வளது கேவலமானது என்பதைப் பற்றி நீங்கள் வெளியே யாரிடமும் கேட்க வேண்டாம், உங்கள் மனச்சாட்சியையே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

அவர்களை விடுவிப்பதற்கு நீங்கள் உதவிதான் செய்யவில்லை. உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரபமாவது செய்யாமல் இருந்தால் போதும். இதுவே இந்த முன்னாள் போராளிகளுக்கு உங்களால் செய்யக்கூடிய மிகப்பெரிய உபகாரமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக