12 ஜூலை, 2010

இலங்கைத் தூதரகங்களை இந்தியாவில் அகற்ற வேண்டும் : திருமாவளவன்

இலங்கை அரசின் தூதரகங்களை இந்தியாவில் அப்புறப்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள தூதரகத்தையும் உடனே அகற்ற வேண்டும். மத்திய அரசு இதை அப்புறப்படுத்தாவிட்டால் பொது மக்களைத் திரட்டி இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசை கண்டித்தும் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அகற்ற வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.

இலங்கை அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. திருமாவளவன் அங்கு பேசுகையில்,

"மீனவர் செல்லப்பன் சமீபத்தில் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டார். இதற்கிடையில் நேற்று மீண்டும் கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கைப் படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்த பிறகும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. தமிழக மீனவர்கள், தொடர்ந்து படுகொலை செய்யப்படுகிறார்கள். 25 ஆண்டு காலமாக பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள்.

கடந்த 5 வருட காலமாக தமிழக மீனவர்கள் 100-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். அதுபற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

இலங்கை அரசை இந்திய அரசு கடும் எச்சரிக்கை செய்து தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை அரசுடன் இந்திய அரசு எந்த ஒரு ஒப்பந்தம் செய்தாலும் தமிழக முதல்வருடன் கலந்து பேசித்தான் கையெழுத்திட வேண்டும்.

இதுவரை 7 ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்னது. இதுபற்றி கலைஞரிடம் கலந்து பேசவில்லை. மேலும் இலங்கையில் ஐ.நா.சபை அலுவலகத்தை மூடுவதற்கும் மனித உரிமை மீறல்களை ஆராய அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவை எதிர்த்தும் இலங்கையில் ஆர்ப்பாட்டம் நடக்கின்றது.

ஐ.நா. சபையையே எதிர்க்கும் இலங்கை அரசின் தூதரகங்களை இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள தூதரகத்தையும் உடனே அகற்ற வேண்டும். மத்திய அரசு இதை அப்புறப்படுத்தாவிட்டால் பொது மக்களைத் திரட்டி இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுவோம்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக