12 ஜூலை, 2010

முந்திரிக் காணியில் கடற்படை முகாம்

 கடற்படை முகாம் அமைப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது


கடற்படை முகாம் அமைப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது
முந்திரிக் காணி கடற்படை முகாம் அமைப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேசத்திலுள்ள அரசாங்க முந்திரி பண்ணைக்குரிய 1200 ஏக்கர் காணி கடற்படை முகாமொன்று அமைப்பதற்கு அடையாளம் காணப்பட்டு, அதற்கான அறிவித்தல் பலகையும் நாட்டப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் கூறுகின்றார்

இது தொடர்பாக தனது ஆட்சேபனையையும் எதிர்ப்பையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த தீர்மானம் காரணமாக எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் முந்திரி செய்கையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவிக்கின்றார்

அமைச்சரிடம் கோரியும் பலனில்லை

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கினைப்புக் குழுக் கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் நேரடியாக இந்தத் தீர்மானத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்த போதிலும் அமைச்சர் அதனை நிராகரித்து விட்டதாக இரா.துரைரட்ணம் கூறுகின்றார்.

கடந்த இரண்டரை வருடங்களாக குறித்த பண்ணையில் எந்தவித அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததன் காரணமாகவே பாதுகாப்பு தரப்பினரின் தேவைக்காக இக் காணி அடையாளம் காணப்பட்டதாக அமைச்சர் தனது பதிலில் கூறியதாகவும் பி.பி.சி தமிழேசையிடம் பேசிய இரா.துரைரத்தினம் குறிப்பிட்டார்.

அரசாங்கம் திட்டமிட்டு கிழக்கு மாகாணத்தில் படை முகாம்கள் அமைப்பதற்கு காணிகளை சுவீகரித்து வருவதாக இரா.துரைரத்தினம் குற்றம் சுமத்துகின்றார்.

வடக்கிலும் இராணுவத் தேவைகளுக்காக காணிகள் சுவீகரிப்பு

இதேவேளை, வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் பரப்புடைய காணியை இராணுவத் தேவைகளுக்காக அரசாங்கம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை அங்குள்ள மக்களை பெரிதும் கவலையடையச் செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

கையகப்படுத்தப்படும் காணிகளுக்காக நட்டஈடு வழங்கப்படுமென அறிவிக்கும் சுற்றறிக்கைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்து மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

பொதுமக்களின் காணிகள் இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படக்கூடாது என தமது கட்சி அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ள போதிலும் அந்தக் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வில்லையெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக