12 ஜூலை, 2010

வன்முறையைத் தூண்டியதாக டைரக்டர் சீமான் சென்னையில் கைது

நாம் தமிழர் இயக்கத் தலைவர் டைரக்டர் சீமன் இன்று சென்னையில் கைது செய்யப்பட்டார்.

இன்று காலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் பேராசிரியர் தீரன், தமிழ்முழக்கம் சாகுல்அமீது, தென்னரசு, திருச்சி வேலுசாமி ஆகியோர் நிருபர்களைச் சந்தித்து சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

நாம் தமிழர் இயக்கம் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் இயக்கத் தலைவர் டைரக்டர் சீமான்,

"தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது தொடர்ந்தால் இங்கு படிக்கும் சிங்கள மாணவர்களை நடமாட விடமாட்டோம்" என்று எச்சரித்தார்.

இதுகுறித்து வடக்கு கடற்கரை பொலிசார் சீமான் மீது வன்முறையைத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர்.

சீமானைக் கைது செய்வதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டிருந்தது.

சேப்பாக்கத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக்கு டைரக்டர் சீமானும் வருவதாகக் கூறப்பட்டது. அங்கு வைத்து அவரை கைது செய்வதற்காக இன்று காலை 7.00 மணிக்கே நூற்றுக்கணக்கான பொலிசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

அங்கு வருவதற்கு 4 வாசல்கள் உள்ளன. 4 வாசல்களிலும் பொலிசார் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டனர். ஹெல்மட் அணிந்து சென்ற பத்திரிகையாளர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

சீமான் கைது செய்யப்படுவதை படம் பிடிப்பதற்காக ஏராளமான புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்கள் காலை 9.00 மணியில் இருந்தே குவிந்திருந்தனர்.

பொலிஸாருக்கு எதிராகக் கோஷம்

பகல் 11.30 மணியளவில் சீமான் வாலாஜா வீதி வழியாக சேப்பாக்கத்துக்கு வந்தார். அவரது வருகையை எதிர்பார்த்து நூற்றுக்கணக்கான நாம் தமிழர் இயக்க தொண்டர்கள் காத்திருந்தனர். காரிலிருந்து சீமான் இறங்கியதும் பொலிசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

சீமானைப் பொலிஸ் வாகனத்தில் ஏற்ற விடாமல் காரைச் சுற்றி சூழ்ந்து கொண்டனர். பத்திரிகையாளர்களும் அவரிடம் பேட்டி எடுப்பதற்காக முண்டியடித்தனர். இதனால் கலவரம் ஏற்பட்டது.

"சீமானை பேசவிடு..." என்று கூறி நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். சுமார் 15 நிமிட போராட்டதுக்கு பின் டைரக்டர் சீமானை பொலிசார் வாகனத்தில் ஏற்றினர். பின்னர் ஜோர்ஜ் டவுன் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காகப் பலத்த பாதுகாப்புடன் அவரை அழைத்துச் சென்றனர்.

சீமான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது கட்சியினர் வாலாஜா வீதியில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 10 பேரை பொலிசார் கைது செய்தனர்.

சீமான் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது பொலிஸ் வாகனத்தைச் சுற்றி நின்று கொண்டு நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.

சீமானின் கடிதத்தில்.....

கைதான சீமான் தான் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை பத்திரிகையாளர்களிடம் வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:

"உங்களைச் சந்திப்பதற்கு முன்பு நான் கைது செய்யப்பட்டால் சில செய்திகளை பகிர்ந்து கொள்ள முடியாது. எனவே இந்த கடிதத்தைத் தருகிறேன்.

வன்முறை, பிரிவினையைத் தூண்டியதாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் 561 பேரை இலங்கை இராணுவம் சுட்டு வீழ்த்தியது வன்முறையைத் தூண்டும் செயல் இல்லையா? எங்கள் மீனவர்கள் சுடப்படுவதை பாதிக்கப்பட்டவர்களின் குரலாக கருதி நான் பேசியதால் வன்முறை ஏற்பட்டு விட்டதா?

தி.மு.க. மீனவர் அணியினர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராடினார்களே, இது யாருக்கு எதிராக? ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாடு பிரிவது பிரினைவாதம் என்றால் உலகத்தில் சுதந்திரம் என்ற சொல்லே இருந்திருக்காது.

இன்று கூட இலங்கை இராணுவம் தமிழக மீனவர்களைத் தாக்கியிருக்கிறது. இதற்கு அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?"

இவ்வாறு அந்த கடிதத்தில், கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே டைரக்டர் சீமான் தனது வக்கீல் சதா சந்திரசேகரன் மூலமாக சென்னை ஜோர்ஜ்டவுன் நீதிமன்றில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

சீமானைக் கைது செய்த போது ஏற்பட்ட கலவரத்தில் பத்திரிகையாளர்கள் 4 பேர் தாக்கப்பட்டனர். தாக்கியவர்கள் மப்டியில் இருந்த பொலிசார்தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்கிய பொலிசார் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் எதிரில் பத்திரிகையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் கிடைத்ததும் மத்திய சென்னை இணை கமிஷனர் தாமரைக் கண்ணன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் பத்திரிகையாளர்கள் மறியலை கைவிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக