29 ஜூன், 2010

கே.பி. மீதான விசாரணை தொடர்ந்து இடம்பெறுகிறது



கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் ஆயுத கொள்வனவு மற்றும் பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன என்றும் அவர் தற்போது அரசாங்கத்திற்கு அளித்துவரும் ஆதரவு காரணமாக மன்னிப்பு அளிக்கப்படுவாரா என்பது குறித்து இப்பொழுதே எதுவும் கூறிவிட முடியாதெனவும் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

முன்னர், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதம ஆயுத கொள்வனவாளராக இருந்த கேபி அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்ட பின்னர் விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு குறித்த பல தகவல்களை வெளியிட்டார் என்று அறிக்கைகள் தெரிவித்தன. தற்போது அமைச்சர் ரம்பக்வெல்ல அவர் பற்றி தெரிவிக்கையில் கேபி தெரிவித்த தகவல்கள் குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அதன் பின்னரே அவருக்கு மன்னிப்பு வழங்குவது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறினார்.

அவருக்கெதிரான விசாரணைகள் நடைபெறும் அதேவேளை புலம்பெயர் தமிழர்களை ஈடுபடுத்துவதற்கான சில வழிமுறைகளில் அவர் அரசாங்கத்திற்கு உதவிவருகிறார் என்று அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார். எவ்வாறாயினும் அவருக்கு மன்னிப்பு அளிக்கப்படுமா என்பது பற்றி தற்போது எதுவும் கூற முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்து ஒரு வருடத்தின் பின்னர், தற்போது இலங்கையில் யுத்தத்தின் பின்னரான அபிவிவருத்திப் பணிகளிலும் நல்லிணக்த்தை ஏற்படத்துவதற்கான முயற்சிகளிலும் புலம்பெயர் தமிழர்களை ஈடுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு கேபி உதவியளித்து வருகிறார். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பும் பெருந்தொகையான புலம்பெயர் தமிழர்களும் உதாசீனம் செய்து வந்துள்ளனர்.

புலம்பெயர் தமிழர்களின் 21 உறுப்பினர்கள் அடங்கிய தூதுக்குழு ஒன்றுடன் கேபி கடந்த வாரம் வடபகுதிக்கு விஜயம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது. ஜேவிபியினர் இதனை கண்டித்து, ஜெனரல் சரத் பொன்சேகா பொதுநலவாய பாராளுமன்ற சங்க கூட்டத்திற்கு செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், மிகவும் பாரதூரமான குற்றச்செயல்கள் புரிந்ததாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பத்மநாதன் எவ்வாறு வடபகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார் என்று கேள்வி எழுப்பினார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக