30 மே, 2010

ஐ. தே. க. பல குழுக்களாகப் பிளவு: மறுசீரமைப்பு செயற்பாடு குழப்பத்தில்

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு செயற்பாடுகளை ஆரம்பத்திலேயே முடக்குவதற்கான சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.

மறுசீரமைப்புச் செயற்பாடுகளில் ஒருவருக்கொருவர் முரண்படும் விதத்தில் சிலர் பரஸ்பரம் கருத்துகளைப் பரிமாறி சதி செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில், ஐ.தே.க.வை மறுசீரமைப்பதற்கான முயற்சியை மீண்டும் முடக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

கட்சிக்குள் குழுக்களும் பிரிவுகளும் மேலும் மேலும் உருவாகுவதையும் மற்றும் கட்சி மீண்டுமொருமுறை இர ண்டாகப் பிளவுபடுவதையும் எவ்விதத்திலும் தவிர்க்க முடியாதுபோகுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டுமெனக் குரல் எழுப்பும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், ரகசியமாக ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து இரட்டைவேட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இதேவேளை ரவி கருணாநாயக்கவுக்கும் சஜித் பிரேம தாசவுக்குமிடையிலான மோதல் தற்போது பகிரங்கமாக இடம்பெறத் தொடங்கியுள்ளது.

அதேநேரம், கட்சித் தலைவர் பதவிக்கு மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவையே நியமிக்க வேண்டுமெனப் பகிரங்கமாகக் கூறுவோர், ரகசியமாக சஜித் பிரேமதாசவுடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

தலைமைத்துவத்திற்கு இருவர் போட்டியாக வரும் பட்சத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் சஜித் பிரேமதாச அரசியலில் அநாதரவாகும் நிலையே ஏற்படுமென்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்சி மறுசீரமைப்பு யோசனையின்படி தலைமையைத் தேர்ந்தெடுக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அது சஜித் பிரேமதாசவைத் தனிமைப்படுத்துவ தாகவே முடியுமென்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, இடைக்கிடை தலை மைத்துவத்தை மாற்ற தேர்தல் நடத்துவது கட்சியைப் பலவீனப்படுத்துவதாகவே அமையுமென்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக