21 மார்ச், 2010

கிளி.,முல்லை மாவட்டங்களில் மீட்கப்பட்ட வாகனங்கள் மீள ஒப்படைக்க நடவடிக்கை:வடமாகாண ஆளுநர்




யுத்தம் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தங்களது வாகனங்கள் உடைமைகளை விட்டு வந்தவர்கள் அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் உடனடியாக விபரங்களை சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விரு மாவட்டங்களிலும் இதுவரை 50,000 சைக்கிள்கள், 20,000 மோட்டார் சைக்கிள்கள், 500 டிராக்டர்கள் (உழவு இயந்திரங்கள்) 20,000 தண்ணீர்ப் பம்புகள் மற்றும் ஒரு தொகை சிறியரக உழவு இயந்திரங்கள் (லேண்ட் மாஸ்டர்) என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் கிளிநோச்சிக்குக் கொண்டு வரப்படவுள்ளதுடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் திருத்த வேலைகள் செய்து புதுப்பிக்கப்படவுள்ளன.

கிளிநொச்சியில் 16 ஏக்கர் நிலப்பரப்பு தெரிவு செய்யப்பட்டு சுத்தப்படுத்தும் வேலைகள் செய்ய ப்படுகின்றன. சேகரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களும் இங்கு கொண்டு வரப்பட்டு திருத்த வேலைகள் நடத்தப்படவுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

மோட்டார் சைக்கிள்கள், டிராக்டர்கள் போன்றவற்றின் உரிமையை உறுதி செய்யக்கூடிய ஆவ ணங்கள் அல்லது ஏதாவது ஒரு சான்றைக் காண்பித்து தங்களது வாகனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அதேவேளை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக வாகன உரிமை தொடர்பாகவும் உறுதி செய்யப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் விட்டுவந்த பஸ்,லொறிகள் போன்றவற்றையும் பெற்றுக்கொள்ள முடியுமா என ஆளுநரிடம் கேட்ட போது:

"இப்போதைக்கு அது சாத்தியப்படமாட் டது. அவை பழுதடைந்த நிலையில் இருப்பதால் கொண்டுவருவதில் சிக்கல்கள் உள்ளன. முதலில் இப்போது சேகரிக்கப்பட்ட 10,000 வாகனங்களையும் மக்களிடம் கையளிப்பதே எமது நோக்கம் "எனத் தெரிவித்ததாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிடுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக