9 மார்ச், 2010

புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் சிங்கள ராணுவம் வெற்றிச்சின்னம் அமைத்து வருகிறது.




வெற்றிச்சின்னம்

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடைபெற்று வந்த போர், கடந்த ஆண்டு மே மாதம் முடிவடைந்தது. அப்போது நடந்த சண்டையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. பிரபாகரன் உடல், முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடல் ஏரிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறியது.

இந்நிலையில், விடுதலைப்புலிகளுடனான போரில் வெற்றி பெற்றதன் அடையாளமாக, பிரபாகரன் கொல்லப்பட்ட நந்திக்கடல் ஏரி அருகே இலங்கை ராணுவம் வெற்றிச்சின்னம் அமைத்து வருகிறது. இத்தகவலை கொழும்பில் இருந்து வெளிவரும் ஓர் ஆங்கிலப்பத்திரிகை தெரிவித்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தை குறிக்கும் வகையிலும், இந்த வெற்றிச்சின்னம் அமைக்கப்பட்டு வருவதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இறுதிக்கட்ட போர் நடைபெற்ற புதுக்குடியிருப்பில் ஒரு வெற்றிச்சின்னம் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. அதில், போரில் பங்கேற்ற ராணுவப் படைப்பிரிவுகளின் பெயர்கள் செதுக்கப்பட்டுள்ளன.

அனாதையாக 35 ஆயிரம் வாகனங்கள்

இதற்கிடையே, போர் முடிவடைந்து ஓராண்டு ஆகியும், இறுதிக்கட்ட போர் நடைபெற்ற பகுதிகள், இன்னும் அலங்கோலமாக காட்சி அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வெள்ளிமுள்ளிவாய்க்கால், நந்திக்கடல் உள்ளிட்ட பகுதிகளில், 10 ஆயிரம் மோட்டார் சைக்கிள்களும், 25 ஆயிரம் சைக்கிள்களும் அனாதையாக கிடக்கின்றன. இவை விடுதலைப்புலிகளுக்கும், அப்பாவி தமிழர்களுக்கும் சொந்தமானவை ஆகும்.

மேலும், தமிழர்கள் வசித்து வந்த குடிசை வீடுகளும், கான்கிரீட் வீடுகளும் இடிந்து கிடக்கின்றன. ராணுவம் பயன்படுத்திய குண்டு துளைக்காத லாரிகள், ஜீப்கள் ஆகியவையும் போரின்போது தாக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.

வெறிச்சோடிய பகுதிகள்

போரில் தகர்க்கப்பட்ட டெலிவிஷன் கோபுரத்தை ராணுவத்தினர் மறுபடியும் எழுப்பி உள்ளனர். இறுதிக்கட்ட போர் நடைபெற்ற புதுக்குடியிருப்பு, விஸ்வமடு, புதுமத்தளம் ஆகிய பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணி இன்னும் முடிவடையவில்லை. இதனால் அப்பகுதிகள், தமிழர்கள் யாரும் குடியேற்றம் செய்யப்படாமல் வெறிச்சோடி போய்க்கிடக்கின்றன.

அதே சமயத்தில், முல்லைத்தீவு கடல் பகுதியில் வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்களை குடியேற்றுவது குறித்து இலங்கை அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக இலங்கை மந்திரி மில்ராய் பெர்னாண்டோ அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக