9 மார்ச், 2010

நைஜீரிய மதக்கலவரத்தில் 500 பேர் பலி : 95 பேர் கைது




நைஜீரியா நாட்டில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் 500 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக 95 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆபிரிக்காவில் உள்ளது நைஜீரியா. இங்கு பெருந்தொகையான முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர். இவர்களிடையே அடிக்கடி கலவரம் வெடிப்பது வழக்கம்.

கடந்த ஜனவரி மாதம் நடந்த கலவரத்தில் 550 பேர் பலியானார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இந்த 2 பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

நைஜீரியாவின் மத்திய பகுதியில் ஜோஸ் நகர் அருகே உள்ள கிராமங்களில் இந்த மோதல் சம்பவங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தன. ராட்சாட் மற்றும் ஜோட் ஆகிய கிராமங்களுக்குள் புகுந்த ஒரு தரப்பினர்,வீடுகளுக்கு தீ வைத்தனர்.

அவர்கள் பெரோன் இனத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளையே தீ வைத்தனர். இந்த தாக்குதலை புலானி இனக்குழுவினர் நடத்தினார்கள். அவர்கள் 3கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதலை நடத்தினர்.

பழிக்குப் பழி

இது தொடர்பாக ஜோஸ் நகரின் புலானி இனக்குழுவைச் சேர்ந்த சுப் அல்காலி கூறுகையில்,

"இரு வாரங்களுக்கு முன் எங்கள் இனத்தினர் மீது எதிர் தரப்பினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். இதற்கு பழிக்குப் பழி வாங்குவதற்காக தான் இந்தத் தாக்குதல் நடந்தது" என்றார்.

தாக்குதல் நடந்த போது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் இருந்து விட்டனர் என்றும் ஒரு பொலிஸ் அதிகாரியைக் கூட கலவரப்பகுதியில் காணவில்லை என்றும் உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.

500 பேர் பலி

இருதரப்பினரும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். பலர் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டனர். சிலர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இந்தக் கலவரத்தில் 100 பேர் பலியானதாக தான் முதல் கட்டத் தகவல்கள் வெளியாயின. ஆனால் இந்தத் தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை இப்போது 500 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் பெண்களும், குழந்தைகளுமே அதிகம் என்று கூறப்படுகிறது.

நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்காலிக ஜனாதிபதி குட்லக் ஜோனாதன் கலவரத்தை ஒடுக்கும்படி இராணுவத்துக்கு உத்தரவிட்டிருக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக