3 மார்ச், 2010

கண்ணிவெடிகளை அறியும் கருவி: இலங்கைக்கு சீனா அதிக உதவி


கொழும்பு:"இலங்கையின் வடக்கு பகுதியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளுக்காக, சீனா பெரிய அளவில் உதவி செய்கிறது' என, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.இலங்கை ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நீண்ட காலமாக உள்நாட்டுபோரால் பாதிக்கப்பட்டிருந்த, நாட்டின் வடக்கு பகுதியில் தற்போது அமைதி நிலவுகிறது. அங்கு தேவையான அடிப்படை மற்றும் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முகாம்களில் உள்ள தமிழர் களை அங்கு மறு குடியமர்த்தும் பணியும் முழு வீச்சில் நடக்கிறது.


இன்னும் 70 ஆயிரம் பேர், முகாம்களில் உள்ளனர். அவர்களும் விரைவில் அவர்களது சொந்த ஊர்களில் மறு குடியமர்த்தப்படுவர். வடக்கு பகுதியில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளுக்காக, சீனா பெரிய அளவில் உதவி வருகிறது. ஏற்கனவே, பல ஆயிரம் கோடி ரூபாயை நிதி உதவியாக அந்த நாடு அளித்துள்ளது. இது தவிர, 6,252 குடில்கள் மற்றும் கட்டமைப்பு பணிகளுக்கு தேவையான கனரக இயந்திரங்கள் ஆகியவற்றையும் அளித்துள்ளது.


குறிப்பாக, கண்ணிவெடிகளை கண்டறியும் கருவிகளை, அதிக அளவில் சீனா தந்துள்ளது. இந்த கருவிகளின் உதவியுடன் தான், முல்லைத் தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் அகற்றப் பட்டன. தொடர்ந்து அந்த பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, சீனா சார்பில் கண்ணிவெடிகளை அகற்றும் கருவிகளை ஒப்படைக்கும் விழா நேற்று கொழும்பில் நடந்தது. சீன தூதர் யங் ஜியுபிங், இந்த கருவிகளை இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகேயிடம் வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக