25 மார்ச், 2010

இந்தியா,​​ பாகிஸ்தான் பிரச்னையில் அமெரிக்கா தலையிடாது:​ சிறப்புப் பிரதிநிதி

:​ காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகளில் இந்தியா,​​ பாகிஸ்தான் இடையே இடைத்தரகராக அமெரிக்கா செயல்படாது என்று பாகிஸ்தான்,​​ ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி ரிச்சர்ட் ஹால்புரூக் தெரிவித்தார்.

வாஷிங்டனில் இதுகுறித்து நிருபர்களுக்கு ஹோல்புரூக் அளித்த பேட்டி:

இந்தியாவும், ​​ பாகிஸ்தானும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் துவங்கவேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.​ ஆனால் அதே நேரத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தலையிடாது.

இரு நாடுகளும் கேட்டுக் கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் தலையிடுவது குறித்து அமெரிக்கா பரிசீலிக்கும்.

காஷ்மீர் உள்பட அனைத்துப் பிரச்னைகளையும் இரு நாடுகளும் பேசித் தீர்க்கவேண்டும்.​ இரு நாடுகளுக்கு இடையே கேபினட் அமைச்சர்கள் நிலையிலான அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறவேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது என்றார் அவர்.

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை துவங்க ​ உதவவேண்டும் என்று அமெரிக்காவிடம் பாகிஸ்தான் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தது.​ இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலர் சல்மான் பஷீர் அமெரிக்கா சென்று வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் இந்தியா,​​ பாகிஸ்தான் பேச்சுவார்த்தை விவகாரத்தில் தலையிடமாட்டோம் என்று அமெரிக்கா இப்போது திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

பாகிஸ்தான் தூதரகத்தில் விழா:​​ இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வாஷிங்டனிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பாகிஸ்தான் தேசிய விழா நடைபெற்றது.​ விழாவில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கலந்துகொண்டு பேசியதாவது:​ அமெரிக்காவுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள பாகிஸ்தான் விரும்புகிறது.​ இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்துவேன்.

பாகிஸ்தான் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளோம்.​ எங்கள் தியாகங்களை உலக நாடுகளும் புரிந்துகொண்டுள்ளன.​ மற்ற நாடுகளுடன் இழந்த நல்லுறவை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றார் அவர்.

நிகழ்ச்சியில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் ஜேம்ஸ் ஜோன்ஸ்,​​ பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் அன்னி பேட்டர்சன்,​​ பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அகமது முக்தர்,​​ அமெரிக்க பொது விவகாரத்துறை துணை அமைச்சர் பி.ஜே.​ கிராவ்லி,​​ வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக