5 பிப்ரவரி, 2011

சவால்களுக்கு முகம் கொடுத்து நாட்டை முன்னேற்றுவேன் தேசிய சுதந்திரதின விழாவில் ஜனாதிபதி







முப்பது வருடகாலம் யுத்தத்தினால் இழக்கப்பட்ட மனித உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் நாட்டு மக்களுக் குப் பெற்றுக்கொடுக்கும் சவாலை பொறுப்பேற்றுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இயற்கை அழிவுகளைத் தடுக்க முடியாத போதும், அதனால் பாதிக்கப்பட் டோருக்கு உடனடி நிவாரணங்களை வழங்கி அவர்களது இயல்பு வாழ்க்கையைக் கட்டியெழுப்ப சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

எத்தகைய சவால்களுக்குள்ளும் நாட்டைப் பாதுகாத்து, பொருளாதார அபிவிருத்தியில் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தைக் காலந்தாழ்த்தப் போவதில்லை என தெரிவித்த ஜனாதிபதி, ஜனரஞ்சகமான தீர்மானங்களை எடுப்பதைவிட கஷ்டமான தீர்மானங்களை நிறைவேற்றி சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்புவதே சகலரதும் தேசிய பொறுப்பாகுமெனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் 63வது சுதந்திர தின விழா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கதிர்காமம் ராஜ வீதியில் நடைபெற்றது. பிரதமர் டி.எம். ஜயரட்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, சிரேஷ்ட அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், ராஜதந்திரிகள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

யுத்தத்தினால் அழிவுற்ற பிரதேசங்கள் குறுகிய காலத்தில் மீளக்கட்டியெழுப்பப்பட்டு பசுமையான பிரதேசங்களாகப் பரிணமிப்பதற்கான செயற்பாடுகளை எம்மால் மேற்கொள்ள முடிந்துள்ளது.

சுதந்திரமடைந்த மக்கள் என்ற வகையில் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும். சுதந்திரத்தை வெற்றி கொள்ள நாம் உழைத்தது போல அதனைப் பாதுகாப்பதிலும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். பயங்கரவாதத்தினால் இழக்கப்பட்ட உயிர்களைவிட ஏனைய அனைத்தையும் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் சவாலை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். அச்சவாலை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவோம்.

நாடு பாரிய அழிவைச் சந்தித்த போதும் அதனை மீளக்கட்டியெழுப்புவதில் நாம் மேற்கொண்ட செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கவை.

அழிவுகளில் பாதிக்கப்பட்ட சகல மக்களினதும் வாழ்க்கைத் தரத்தை நாம் மேம்படுத்தி வருகிறோம். அதற்காக பெருமளவு நிதியினை ஒதுக்கி செயற்பட்டு வருகிறோம்.

எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேரிடினும் நாட்டிற்கான அபிவிருத்தியை நாம் காலந்தாழ்த்தப் போவதில்லை. வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கண்ணிவெடிகளை அகற்றி அப்பகுதிகளை நாம் அபிவிருத்தி செய்து வருகிறோம்.

1030 டொலராக இருந்த தனி மனித வருமானத்தை கடந்த ஐந்து வருட காலத்திற்குள் 2,400 டொலராக அதிகரிப்பதற்கு எம்மால் முடிந்துள்ளது. மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடிந்துள்ளதோடு மின்சாரத் திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் வீதி அபிவிருத்திகள், கல்வி, சுகாதாரத்துறைகளில் வசதிகளையும் முன்னெடுத்து வருகிறோம்.

அரச துறை மட்டுமன்றி தனியார் துறையும் முன்னேற்றப்பட்டு பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களை இரண்டு வருட காலங்களில் மீளக்குடியமர்த்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான சகல திட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம்.

கிண்ணியா, மன்னம்பிட்டி, சங்குப்பிட்டி போன்ற பாலங்களையும் நாட்டின் சகல பகுதிகளிலும் மேம்பாலங்களையும் அமைந்துள்ளோம். சுதந்திரத்தின் மூலம் பெற்ற அமைதியை அபிவிருத்தியின் மூலம் அர்த்தமுள்ளதாக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உலக நாடுகள் பெற்று அனுபவிக்கும் வெற்றிகளை எமது மக்களும் அனுபவிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம். அந்த வகையில் வறுமையை ஒழித்து சகல மக்களினதும் வாழ்க்கையை உயர்த்தும் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனநாயகம் போன்றே தாய் நாட்டின் இறைமையும் ஒருமைப்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும். நாம் சிறந்த வெளிநாட்டுக் கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறோம். அதனால் சகல நாடுகளுடனான தொடர்புகளும் மேம்படுத்தப்பட்டு சிறந்த நல்லுறவுகள் கட்டியெழுப்பப்பட்டு ள்ளன.

2500 வருட வரலாற்றுப் பெருமையைக் கொண்டவர்கள் நாம் என்ற ரீதியில் இயற்கையைப் பாதுகாப்பது போலவே மனித உரிமை, மனித கெளரவம் ஆகியவற்றையும் பாதுகாத்து வருகிறோம். தனி மனித உரிமையைப் பாதுகாப்பது மட்டுமன்றி தாய் நாட்டின் உரிமை மற்றும் கெளரவத்தைப் பாதுகாப்பது கட்சிகள் அமைப்புகள் உட்பட சகலரதும் உரிமையும் பொறுப்புமாகும்.

நாம் பெற்றுக்கொண்ட சுதந்திரத்துக்கு ஆசீர்வாதம் வழங்கிய புனித பூமி கதிர்காமமாகும். இன்று ஒரு தீர்க்கமான யுகத்தில் பிரவேசித்துள்ள நாம் எச்சமயத்திலும் தாய் நாட்டை நேசிப்பதிலும் அதன் பெருமையைக் கட்டிக்காப்பதிலும் ஷிட்னிற்க வேண்டும்.

சுதந்திரப் போராட்டங்கள் ஒரு காலத்தின் பதிலாக முடியாது. பெற்றுக் கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் பெற்றுக் கொண்ட வெற்றிகளை எமது மக்களும் அனுபவிப்பதற்கு நாம் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்போம்.

ண்ட்டின் தலைவர் என்றவகையில் முக்கியமானதும் தீர்க்கமானதுமான இந்த யுகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நீங்கள் எம்முடன் இணைந்திருப்பது போல் நாட்டை நேசிப்பவர்களாகவும் நீங்கள் திகழ வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக