9 பிப்ரவரி, 2011

ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் போர்க்குற்றத்தை முன்வைக்க திட்டம்



ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க புலம்பெயர்ந்து வாழும் புலி ஆதரவாளர்கள் திட்டங்களை தயாரித்து வருகின்றனர் என பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட புலி உறுப்பினர்களில் பிரபல்யமானவர்கள் இருக்கின்றனர். இவர்கள் சட்டவிரோத குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசர கால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் டி.எம்.ஜயரத்ன இதனை தெரிவித்தார்.

இங்கு பிரதமர் மேலும் உரையாற்றுகையில் ஐ.நா. செயலாளர் பான் கீ மூனின் நிபுணர்கள் குழு ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பாதகமான அறிக்கையொன்றை பெற்றுக் கொடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு வரைவொன்றை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்டம் புலம் பெயர் புலி ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று வாழும் வாழ்க்கை முறையில் தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது. இதனை பயன்படுத்தி ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு சர்வதேச ரீதியில் அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுகிறது. புனர் வாழ்வளிக்கப்பட்டு வெளியேறிய புலி உறுப்பினர்களில் பலர் பிரபல்யமானவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஜெனீவாவில் ஆரம்பிக்கப்படவுள்ள ஐ.நா மனித உரிமை தொடர்பான மாநாட்டில் இலங்கைக்கு எதிராக பிரசாரத்தை மேற்கொள்ள சர்வதேசத்திலுள்ள புலி உறுப்பினர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுவிற்சர்லாந்தில் ஆயுத விற்பனைகளில் ஈடுபட்ட புலி உறுப்பினர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கனடாவில் புலிகளின் உடைமைகள் அரசு உடமையாக்கப்பட்டுள்ளது. பொலிஸார் கடந்த காலத்தில் நடத்திய சோதனை நடவடிக்கைகள் மூலம் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இயற்கை அனர்த்தங்களை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபம் பெற முயற்சிக்கின்றன. மக்களை திசை திருப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அம் மக்களுக்கான நிவாரணங்களை அரசாங்கம் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வழங்கி வருகிறது.

எனவே இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாட்டில் சொத்துக்களை பாதுகாக்கவும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் அவசர காலச் சட்டம் அவசியமானதாகும். புலம் பெயர்ந்து வாழும் புலி ஆதரவாளர்கள் இன்று எமது நாட்டுக்கு எதிராக சதித் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக