9 பிப்ரவரி, 2011

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த போகத்தில் இலவச நெல், பசளை







தொடர்மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த போகத்தின் போது நெல் மற்றும் பசளையை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த ஆலோசனையை வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விவசாய நடவடிக்கைகளுக்காக வங்கிக் கடன்பெற்ற பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்கள் அந்தக் கடனை மீளக் கொடுக்கும் காலத்தை நீடித்துத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளில் தேவைப்படு பவர்களுக்கு ஆறு மாதகாலத்திற்கு நிவாரண உணவுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்த போகத்திற்கு தயாராகும் விவசாயிகளுக்கு அவர்களது விவசாய நிலங்களை பதப்படுத்துவதற்கு தேவையான வசதிகளும் செய்து கொடுக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

சியம்பாலாண்டுவ பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மஹகொல்ல பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கிவுலேஆர குளத்தின் நிர்மாணப்பணிகளை ஆரம்பிக்கும் பணியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசத்திற்கு மகுடம் 2011 தேசிய கண்காட்சியை முன்னிட்டு மொனராகலை மாவட்டத்தில் அரசாங்கம் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஊவா மாகாண முதலமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ, அமைச்சர்களான சுமேதா ஜி. ஜயசேன, ஜகத் புஷ்பகுமார, எஸ். எம். சந்திரசேன உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்:- மக்களை மேம்படுத்தி கிராமத்தை மேம்படுத்தல், கிராமத்தை மேம்படுத்தி நகரத்தை மேம்படுத்துல் நகரத்தை மேம்படுத்தி நாட்டை மேம்படுத்தல் என்பதே ஜனாதிபதியின் பிரதான இலக்காகும் அந்த அடிப்படையில் விவசாயிகளுக்கு தேவையான உச்சக்கட்ட வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கும்.

வெல்லஸ்ஸ பகுதியிலுள்ள எந்த ஒரு நிலப்பரப்பையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யப்படமாட்டாது என்பதை நான் உறுதியாக கூறிக்கொள்கின்றேன்.

அரசாங்கம் ஏதாவது ஒரு பாரிய அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்கும் போது அதனை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் பொய்ப் பிரசாரங்களை பரப்பி வருவது வழக்கமாகும் என தெரிவித்த அமைச்சர் அதற்கு எவரும் ஏமாற வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக