9 பிப்ரவரி, 2011

வெள்ளைக்கொடி வழக்கின் அரசாங்க தரப்பு சாட்சிகளின் விசாரணைகள் நிறைவடைந்தன

வெள்ளைக்கொடி விவகார வழக்கின் அரச தரப்பு சாட்சிகளின் விசாரணைகள், குறுக்கு விசாரணைகள் மற்றும் மீள் விசாரணைகள் யாவும் நேற்று செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்ததுடன் வழக்கு விசாரணை எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் குழு ஒத்திவைத்தது.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்றது.

மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்று வருகின்ற வெள்ளைக்கொடி விவகார வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 2010 செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமானது.

மனுவின் எதிரியான சரத்பொன்சேகாவின் மீது மக்களிடையே குழப்பம் விளைவித்து மக்களை அச்சுறுத்தியமை, இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளும் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் , அரசாங்கத்திற்கு எதிராக வார்த்தையளவில் விரோதம் செய்தமை என்ற மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டே அவர்மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வழக்கின் முதலாவது சாட்சியாக சண்டே லீடர் பத்திரிகையில் பிரதம ஆசிரியர் பெற்றிகா ஜான்ஸ் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ , 58 ஆவது படையணியின் கட்டளையிடும் தளபதியாக கடமையாற்ற பிரகேடியர் சவேந்திர சில்வா, ஐ.நாவின் மனித உரிமை பேரவைக்கான இலங்கை தூதுவர் சேனுக்க செனவிரத்ன, இலத்திரனியல் ஊடகங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் என 25 பேர் சாட்சியமளித்தனர்.

நேற்றைய சாட்சியம் நிறைவடைந்ததன் பின்னர் பிரதிசொலிசிட்டர் ஜெனரல் புவனகே அலுவிஹார அரச தரப்பு சாட்சிகள் யாவும் இன்றுடன்(நேற்று) நிறைவடைந்து விட்டதாக மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதனிடையே எழுந்த பிரதிவாதியின் சட்டத்தரணியான நளீன் லது ஹெட்டி வழக்கு விசாரணையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தேவையான தமது தரப்பு சாட்சிகளை தயார்படுத்துவதற்கு இடைவெளியொன்று தேவையென கோரிநின்றதை அடுத்த வழக்கு விசாரணை இம்மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக