26 பிப்ரவரி, 2011

ஜூலை கலவரத்தை அரசுடன் இணைந்து நடத்திய சக்திகள் இன்று மனித உரிமை குறித்து பேசுகின்றன: டலஸ்


ஜூலைக் கலவரத்தை அரச அனுசரணையுடன் நடத்தி, தமிழ் மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சக்திகள் இன்று தமிழர்களின் மனித உரிமை பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றன என்று இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அøமச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

யுத்தம் இடம்பெற்ற 30 வருட காலப்பகுதியில் நீங்கள் இழந்த உயிர்களைத்தவிர ஏனைய அனைத்தையும் பெற்றுக் கொடுப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடனுள்ளது என்றும் அவர் கூறினார்.

யாழ். கொக்குவிலில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப கல்லூரியை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து அமைச்சர் டலஸ் உரையாற்றுகையில், தமிழ் மக்களின் கலாசார தலைநகரான யாழ்ப்பாணத்தில் உங்கள் முன் உøயாற்றக் கிடைத்தமை எனது பாக்கியம் எனக் கருதுகிறேன். பெப்ரவரி 25 என்ற இன்றைய தினம் முக்கியமான ஒரு நாளாகும். 1974 ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் திகதி சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் யாழ் பல்கலைக்கழகம் திறந்துவைக்கப்பட்டது. இலங்கை வரலாற்றிலேயே அன்றைய தினத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துமிக்க தினமாக இன்றைய நாள் பதிவு செய்யப்படுகின்றது.

தேசிய முகாமைத்துவ நிறுவனத்தின் கிளை நிறுவனம், இலங்கை தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய இரு பெரும் கல்வியகங்கள் இன்று உங்கள் மண்ணில் காலடி பதிக்கின்றன. யுத்தம் இடம்பெற்ற கடந்த 30 வருடங்களில் யாழ் மண்ணுக்கு உயர்தரம் வாய்ந்த தொழில்நுட்பமோ அல்லது நவீன தொழில்நுட்ப விடயங்களோ வரவில்லை.

அதற்குப் பதிலாக பயங்கரம், பயம், அச்சம், வேதனை, கண்ணீர், சந்தேகம், மந்தபோஷணம், பதற்றமான வாழ்வு ஆகியவையே உங்களுக்கு கிடைத்தன.

ஆனால் இந்த 30 வருட காலப்பகுதியில் நீங்கள் இழந்த உயிர்களைத்தவிர ஏனைய அனைத்தையும் பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடனுள்ளது. ஏனைய பிரதேசங்களை விட இப்பகுதி மக்கள் கல்வியை மதிப்பவர்கள்.

அதனால்தான் யுத்தத்தில் எரிந்துகொண்டிருந்த காலத்திலும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கல்வியைப் பெற்றுக் கொடுத்தீர்கள்.

நாம் பெற்றுக்கொண்ட அனுபவம் தொடர்பான படிப்பினையைப் பெற்றுக் கொள்ளவே முயற்சிக்கின்றோம். அதனை நினைத்து கண்ணீர்விட்டுக் கொண்டிருக்க முடியாது. வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ், உங்களுக்கு தேசிய முகாமைத்துவ நிறுவனத்தின் கிளை நிறுவனம், இலங்கை தொழில்நுட்பக் கல்லூரி என்பவற்றை விட மேலும் தரம்வாய்ந்த கல்வி நிறுவனங்களும் இங்கு வரப்போகின்றன. பட்டங்களை வழங்கும் கல்வியகங்கள் இங்கு வரப் போகின்றன.

எமது அரசாங்கம். நடைமுறைச் சாத்தியமான அரசாங்கமாகும். வெறுமனே பேசிக் கொண்டும் கூட்டங்களை நடத்திக் கொண்டும் காலத்தை வீணடிப்பதற்கும் நாம் தயாரில்லை. மக்களின் தேவை எதுவோ அதுவே அரசாங்கத்தின் தேவை என்பதில் உறுதியாகவுள்ளோம்.

வரலாற்றில் இப்பகுதியில் பல சந்தர்ப்பங்களில் பல விடயங்களை திசை மாற்றி விட்ட சக்திகள் இன்று வேறுபல முகம்களில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசுகின்றன. 1983 இனக்கலவரத்தை அரச அனுசரணையுடன் நடத்தி ,தமிழ் மக்களை அழிவுக்குட்படுத்திய சக்திகள் இன்று தமிழர்களின் மனித உரிமை பற்றிப் பேசுகின்றன.

யாழில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் வாக்குகளை கொள்ளையடித்து, மக்களுக்கு வாக்குகள் மீதிருந்த நம்பிக்கையை சிதறடித்த சக்திகள் இன்று ஜனநாயகம் பற்றி பேசுகின்றன.

திறந்த பொருளாதாரத்தைப் பயன்படுத்தி யாழ் குடாநாட்டின் விவசாயத்தை நசுக்கிய சக்திகள் இன்று யாழ் விவசாயத்துறை குறித்து இப்போது பேசிக் கொண்டிருக்கின்றன.

உலகின் தலைசிறந்த நூலகமான யாழ் நூலகத்தை எரித்த சக்திகள் இப்போது இம் மக்களின் கல்வி கலாசாரம் தொடர்பாக பேசுகின்றன.

அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் இங்கு நான் ஒரு விடயத்தை கூற விரும்புகிறேன். ஜனாபதி தலைமையிலான அரசாங்கம் மக்களின் பயம், அச்சம், சந்தேகத்தைப் போக்கி நாம் அனைவரும் ஒரே இலங்கையின் இனமாக முன்வந்து வாழ்வதற்காக செயற்படும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக