26 பிப்ரவரி, 2011

லிபிய தூதரகத்தில் 400க்கும் அதிகமான இலங்கையர் தஞ்சம்: விமானம், கப்பலில்; அழைத்து வருவதில் அரசாங்கம் தீவிரம்

இந்தியாவின் உதவியை பெறவும் நடவடிக்கைலிபியாவின் திரிபோலி நகரிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையரை நாட்டிற்கு அழைத்துவர துரித நேரடி நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா நேற்று தெரிவித்தார்.

இதேவேளை, லிபியாவில் சீன நிறுவனமொன்றில் தொழில் புரிந்த 36 இலங்கையர்களை சீன நிறுவனம் கிரேக்க நாட்டுக்கு கப்பல் மூலம் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளது. இவர்களையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான விமான டிக்கட்டுகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அனுப்பவுள்ளது.

சுமார் 400 க்கும் மேற்பட் டோர் தற்போது லிபியாவின் திரிபோலி நகரிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களுக்கான விமான டிக்கட்டுகளை வழங்கவும் பணியகம் ஆயத்தமாக உள்ளது என தூதுவர் சுதந்த கணேகல ஆராய்ச்சி கூறினார்.

எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் அல்லது கட்டார் எயார் சேவைக்கு சொந்தமான விமான மொன்று அல்லது வேறு விமானமொன் றையாவது வாடகைக்கு அமர்த்தி இலங்கையரை அழைத்துவர முடியுமா என்பது பற்றியும் ஆராய்ந்து வருகிறோம் எனக் கூறிய அமைச்சர் டிலான், திரிபோலி விமான நிலையத்தில் தரையிறக்குவது பிரச்சினையாக உள்ளது என்றும் கூறினார்.

மேலும் லிபியாவில் எகிப்தின் எல்லையில் தொழில் புரியும் இலங்கையரை எல்லையினூடாக எகிப்துக்குள் பாதுகாப்பாக அழைத்து வர முடியுமா என்பது பற்றி ஆராயுமாறு எகிப்திலுள்ள இலங்கை தூதருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் அவசர தேவை நிமித்தம் எகிப்து தூதருக்கு 2 மில்லியன் ரூபாவும் உடனடியாக அனுப்பப்பட்டுள்ளதாகவும் பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

மேலும் லிபியாவிலுள்ள இலங்கையரை கொண்டுவர கப்பல் ஒன்றை அனுப்புவது தொடர்பாக வெளிவிவகார அமைச்சும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் ஆராய்ந்து வருகிறது எனக் கூறிய அமைச்சர் டிலான், இந்தியாவும் தமது நாட்டு பிரஜைகளை லிபியாவிலிருந்து பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக கப்பலொன்றை லிபியாவின் மோல்டா துறைமுகத்துக்கு அனுப்புகிறது. இந்தியர்களுடன் எமது இலங்கையரையும் அதே கப்பலில் அழைத்து வருவதற்கான முயற்சியிலும் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

தொழில்வாய்ப்புக்காக இலங்கையரை லிபியாவுக்கு அனுப்பிய வேலைவாய்ப்பு முகவர்களையும் அமைச்சர் டிலான் அழைத்து தற்போதைய லிபிய நிலைமை பற்றியும் ஆராய்ந்ததுடன் இலங்கையரை திருப்பி அழைக்க முகவர்களின் பங்களிப்பும் தேவை என்பது பற்றியும் கூறினார்.

லிபியாவில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட இலங்கையர் தொழில் புரிந்து வருவதாகவும் இவர்கள் தொடர்பான கணக்கெடுப்புகள் எடுக்கப்படுவதாகவும் பணியகத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக