11 ஏப்ரல், 2010

கொழும்பு மாவட்டத்தில் விமல், ரணிலுக்கு அதிகூடிய வாக்குகள்: போகொல்லாகம, மிலிந்த, இராதாகிருஷ்ணன் தோல்வி; பெளஸி, லொக்குகே தெரிவு

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 07 உறுப்பினர்களும் தெரிவாகியுள்ளனர்.

அதேநேரம், ஜனநாயக தேசிய கூட்டணியின் சார்பில் இரண்டு உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.

ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பட்டியலில் போட்டியிட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மிகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார். அவர் 2,80,672 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்திற்குப் புதிய முகமாக துமிந்த சில்வா 146,336 விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர்கள் ஏ. எச். எம். பெளஸி, காமினி லொக்குகே ஆகியோர் தோல்வியடைந்து விட்டதாக நேற்றைய தினம் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாயிருந்தன. எனினும், அமைச்சர் பெளஸி 51,641 விருப்பு வாக்குகளைப் பெற்று எட்டாவது இடத்துக்குத் தெரிவாகியுள்ளார். அமைச்சர் காமினி லொக்குகே 49,750 விருப்பு வாக்குகளைப் பெற்று பத்தாவது இடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் முறையே, முன்னாள் அமைச்சர்கள் சம்பிக ரணவக, தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, சுசில் பிரேம்ஜயந்த், ஏ. எச். எம். பெளஸி, ஜீவன் குமாரதுங்க, காமினி லொக்குகே ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆறாவது இடத்துக்குப் புதுமுகமாகத் திலங்க சுமதிபால தெரிவாகியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர்கள் ரோஹித்த போகொல்லாகம,

மிலிந்த மொறகொட, பிரதியமைச்சர் பி. இராதாகிருஷ்ணன் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர். பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன் 9064 விருப்பு வாக்குகளையும், இ. தொ. கா. வேட்பாளர் எம். ரவிச்சந்ரன் 4210 வாக்குகளையும் பெற்றுத் தோல்வியடைந்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 231,957 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்துக்குத் தெரிவாகியுள்ளார். மற்றும் ரவி கருணாநாயக்க, விஜேதாச ராஜபக்ஷ ஆகிய முன்னாள் உறுப்பினர்களும் புதுமுகங்களாக மொகான்லால் கிறேரு, ரோசி சேனநாயக்க, சுஜீவ சேனசிங்க, பிரபா கணேசன் (42,851) ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

மேலும் மொஹமட் முஸம்மில், நல்லையா குமரகுருபரன், மொஹமட் மஹ்ரூப், சபீக் ரஜாப்டீன் ஆகியோர் தோல்வியடைந்தள்ளனர்.

இது இவ்வாறிருக்க முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் இரண்டு பேர் வெற்றி பெற்றுள்ளனர். சரத் பொன்சேகா 98,458 விருப்புவாக்குகளைப் பெற்றும், ஜே. வி. பி.யின் முன்னாள் உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி 78,126 விருப்பு வாக்குகளைப் பெற்றும் தெரிவாகியுள்ளனர். ஜே. வி. பியின் முன்னாள் உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி உட்பட 20 பேர் தோல்வியடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக