2 டிசம்பர், 2010

போர்க்குற்றம்' புதிய வீடியோ







சானல் 4 இன் புதிய வீடியோ
பிரிட்டனின் சானல் 4 தொலைக்காட்சி இலங்கை இராணுவம் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டும் கூடுதல் வீடியோ காட்சிகளை ஒளிபரப்பியுள்ளது.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரிட்டனுக்கு ஆக்ஸ்போர்ட் யூனியனின் அழைப்பின் பேரில் விஜயம் செய்திருக்கும் நிலையில் இந்த வீடியோ பிரதியை சானல் 4 ஒளிபரப்பியுள்ளது.

கடந்த வருடத்தில் சானல் 4 இனால் ஒளிபரப்பட்ட வீடியோவின் விரிவான பகுதியே இது என்று கூறி இதனை அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

பலர் இலங்கை இராணுவம் போன்று காணப்படுபவர்களால் சுட்டுக்கொல்லப்படுவதாக அந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டது.

இந்த வீடியோவின் பிரதியில் மேலும் நிர்வாணமான நிலையில் இறந்த பெண்களின் சடலங்களும் காண்பிக்கப்பட்டிருந்ததாகவும் சானல் 4 கூறியுள்ளது. ஆயினும் அந்தக் காட்சிகளை கோரமானவை என்பதால் தணிக்கை செய்ததாகவும் அது கூறியிருந்தது.


இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
அந்த வீடியோவில் காணப்பட்ட சில விரசமான உரையாடல்களைக் கொண்டு பார்க்கும் போது அந்தப் பெண்கள் கொல்லப்படுவதற்கு முன்னதாக பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கலாம் என்று கூறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சானல் 4 கூறியுள்ளது.

இந்த வீடியோ காட்சியை பிரிட்டனுக்கான இலங்கை தூதரகம் முற்றாக நிராகரிப்பதாக கூறியுள்ளது. கடந்தவருடமும் இப்படியான வீடியோ வெளியான போது அவற்றை தொழில்நுட்ப பரிசோதனைக்கு உட்படுத்தி இலங்கை அரசாங்கம் அவை உண்மையானவை அல்ல, போலியானவை என்று கூறியிருந்ததாகவும் இலங்கை தூதரகம் கூறியுள்ளது.

ஆனால், கடந்த வருடம் வெளியான வீடியோ உண்மையானதாக தென்பட்டதாக ஐ நா சோதனைகள் கூறின.

இந்த வீடியோ காட்சிகள் மிகவும் கொடூரமானவையாக இருந்ததாகக் கூறுகிறார் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்திய இயக்குனரான பிராட் அடம்ஸ், எந்தவொரு பொறுப்புள்ள அரசாங்கமும் இத்தகைய வீடியோக்கள் வெளியாகும் சூழ்நிலையில் அவை குறித்து புலனாய்வுகளை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக