2 டிசம்பர், 2010

தாழமுக்க வலயம் நகர்வு: மழை குறையும்; மழையால் 46,000 பேர் பாதிப்பு 5000 பேர் இன்னும் முகாம்களில்

இலங்கைக்கு அண்மையில் நிலைகொண்டிருந்த தாழமுக்க வலயம் இலங்கையை விட்டு தூர நகர்வதால் எதிர்வரும் தினங்களில் மழை குறைவடையுமென காலநிலை அவதான நிலையம் நேற்று தெரிவித்தது.

இதேவேளை வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மாலை மற்றும் இரவு வேளைகளில் இடைக்கிடை கடும் மழை பெய்யுமென எதிர்பார்க்கப் படுகிறது.

இதேவேளை தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக காலி, நுவரெலியா, புத்தளம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நிலை தணிந்து வருவதாகவும், முகாம்களில் இருந்த மக்கள் வீடுகளுக்கு திரும்புவதாகவும் இடர் முகாமைத்துவ நிலையப் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.

தற்பொழுது 5000 பேர் 17 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வெள்ளம் காரணமாக 11,333 குடும்பங்க ளைச் சேர்ந்த 45,779 பேர் பாதிக்கப்பட்டு ள்ளனர். வெள்ளத்தினால் 500 வீடுகள் பாதி சேதமடைந்துள்ளதோடு, 62 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மன்னாரில் 101 வீடுகளும் யாழ்ப்பாணத்தில் 69 வீடுகளும் குருநாகலையில் 254 வீடுகளும் சேதமடைந்துள்ளதாகவும் கொடிப்பிலி கூறினார்.

வெள்ளத்தினால் மன்னாரில் 5855 குடும்பங்களைச் சேர்ந்த 23,680 பேரும், யாழ்ப்பாணத்தில் 5189 பேரும், முல்லைத்தீவில் 1108 பேரும், கிளிநொச்சியில் 182 குடும்பங்களும், புத்தளத்தில் 6456 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மட்டக் களப்பில் 127.8 மி.மீ. உம், அம்பாறையில் 98 மி.மீ. உம், திருகோணமலையில் 89.7 மி.மீ உம், அநுராதபுரத்தில் 68.5 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

தாழமுக்க நிலை இலங்கைக்கு வெளியே நகர்கின்ற போதும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களை அண்டிய கடற்பகுதிகளுக்கு இதனால் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வும் காலநிலை அவதான நிலையம் கூறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக