4 அக்டோபர், 2010

இராணுவ முகாம்களை அமைப்பதில் முனைப்பு காட்டும் அரசு வன்னி மக்களைக் கண்டு கொள்ளாதிருக்கின்றது-த.தே.கூ

வன்னி நிலப் பரப்பில் இராணுவ முகாம்களையும் பொலிஸ் நிலையங்களையும் அமைப்பதில் பாரிய முனைப்புக்களைக் காட்டி வருகின்ற அரசாங்கம், மீள் குடியமர்த்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற மக்கள் தற்போதைய மழை வெள்ளத்தால் ஒதுங்குவதற்குக் கூட இடமில்லாது தவித்துக் கொண்டிருப்பதைக் கண்டு கொள்ளாது இருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மீள்குடியேற்றக் கிராமங்கள் வெள்ளக் காடாக காட்சியளிப்பதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பெய்து வருகின்ற மழையின் காரணமாக மக்கள் பல் வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடு த்து வருகின்ற நிலையில் இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களின் நிலைமைகள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிச் செயலாளரும் வன்னி மாவட்ட எம்.பி. யுமான செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

மீள் குடியேற்றப்பட்டதாகக் கூறப்படுகின்ற எமது மக்கள் தற்போது பெய்து வருகின்ற அடை மழையினால் செய்வதறியாது தவிக்கின்றனர். மீள் குடியேற்றக் கிராமங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரையில் சகலரும் இயற்கையின் தாக்கத்துக்கு முகம் கொடுத்து வருகின்ற அதேவேளை ஒதுங்கி நிற்பதற்கும் இடமில்லாது அவதிப்படுகின்றனர்.

நிரந்தரமான வீடுகள் அமைத்துக் கொடுக்காததன் விளைவாகவே எமது மக்கள் இவ்வாறு கஷ்டப்படுகின்றனர். மழை காலம் ஆரம்பமாவதற்கு முன்னரே இன்றைய நிலைமை குறித்து அரசாங்கத்துக்கு அறிவித்தோம். மீள் குடியேற்றப்பட்டதாகக் கூறப்படுகின்ற மக்கள் மழைக் காலத்தின்போது பாதிக்கப்படாத வகையில் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நாம் அரசாங்கத்தை வற்புறுத்தி வந்தோம்.

ஆனால் இவ்விடயத்தில் அலட்டிக் அரசாங்கமும் அதன் ஆட்சியாளர்களும் துன்பப்பட்ட மக்களை மேலும் துன்பத்துக்குள் தள்ளிவிட்டுள்ளதையே காண முடிகின்றது. மழை வெள்ளத்தைக் கருத்திற் கொண்டு மாற்றுத் திட்டங்கள் எதுவுமே வன்னி நிலப் பரப்பில் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் இராணுவ முகாம்களையும் பொலிஸ் நிலையங்களை அமைத்து அதன் பணிகளை பூர்த்தி செய்து கொள்வதில் மாத்திரம் அரசாங்கம் தனது கடமையை மிகவும் சாதுரியமாக மேற்கொண்டு வருகின்றது. உண்மையில் இது எமக்கு கவலையளிக்கின்றது. நிரந்தரமில்லாத அரை குறையான மீள் குடியேற்றத்தை நம்பிய தமிழ் மக்கள் இன்று இரட்டிப்பான கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக