3 அக்டோபர், 2010

அரசு விடுதலை புலிகளின் புனர் வாழ்வில் அ திக கவனம்




தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டதொடரில் முடிவு

2.தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கியுள்ள உடனடி தேவைகள் குறித்து இன்றைய தமிழ் கட்சிகளின் அரங்கம் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது என ஸ்ரீ டெலோ சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டதொடர் கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியின் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

ஈ.பி.டி.பி.செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் வரதராஜபெருமாள்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பூ.பிரசாந்தன், தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு செயலாளர் கே.சிவாஜிலிங்கம், புளோட் சார்பில் உதயன் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மிக முக்கிய பிரச்சினைகளில் ஐந்து விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது, வடகிழக்கில் யுத்த காலத்தில் கொல்லப்பட்ட போராளிகள் உட்பட பொதுமக்களின் மரணச் சான்றிதழை பெற்றுக்கொடுள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

பொதுவாக ஒருவர் காணாமல்போகும் பட்சத்தில் அவர் 5வருடங்களில் திரும்பிவராவிட்டால் அவருக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கப்படுகின்றது. எனினும் ஜே.வி.பி.யினர் கொண்டு வந்த தீர்மானம் ஒன்றின் படி இரண்டு வருடங்களில் அவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டன.

இதன் காரணமாக யுத்த காலத்தில் கொல்லப்பட்ட போராளிகள் மற்றும் கொல்லப்பட்ட பொதுமக்கள் இதுவரையில் மரணச்சான்றிதழ் பெற்றுக்கொள்வதில் பலத்த சிரமத்தினை எதிர்நோக்கிவருகின்றனர்.

இதேபோன்று யுத்த காலத்தில் பிறந்த பிள்ளைகளுக்கான பிறப்புச்சான்றிதழை பெற்றுக்கொள்ளமுடியாத நிலை இருந்தது.அதனை பெற்றுக்கொடுப்பது சம்பந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டன.

அத்தோடு வடகிழக்கில் காணி உரிமையற்றவர்கள் குடியேறுதல் தொடர்பிலான தகவல்களை திரட்டி இது விடயமாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மழைகாலம் ஆரம்பமாகியுள்ளதால் வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது. ஆதலால் அந்த மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

யுத்தம் முடிவடைந்து யுத்த நடவடிக்கையில் ஈடுபட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு மாத்திரமே அரசாங்கம் புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்கள் பக்கமே அரசு முழுமையான கவனத்தை செலுத்திவருகின்றது.

ஆனால் யுத்த நிலையின்போது விடுதலைப்புலிகளினால் பாதிக்கப்பட்டு இன்று எதுவும் அற்ற நிலையில் உள்ள ஏனைய இயக்க உறுப்பினர்கள் தொடர்பில் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் நலன் தொடர்பில் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று அவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைக்கு உதவுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக