2 அக்டோபர், 2010

சரத் பொன்சேகாவுக்கு முழு அளவு பாதுகாப்பு : அமைச்சர் குணசேகர

ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு முழு அளவில் பாதுகாப்பு வழங்கப்படும் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் டி.யூ.குணசேகர தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில், பல சிரேஷ்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தண்டனை அனுபவித்து வருவதாகவும், இதனால் விசேட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெலிக்கடைச் சிறைச்சாலையில் மூவாயிரம் கைதிகள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இராணுவ மற்றும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் இவர்களுள் அடங்குவர்.

எனினும் சரத் பொன்சேகாவுக்கு எந்தவித தீங்கும் நேர்வதற்கும் இடமளிக்கப்பட மாட்டாது.

சரத் பொன்சேகாவுக்கு முழு அளவில் பாதுகாப்பை வழங்குமாறு வெலிக்கடைச் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்குப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்

அதேவேளை, சரத் பொன்சேகாவுக்கு விசேட பாதுகாப்பு எதுவும் வழங்கப்பட மாட்டாது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜெனரல் வீ.ஆர்.டி. சில்வா தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவை சாதாரண கைதியாகவே நோக்குவதாகவும், அவருக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் இராணுவத் தளபதி என்ற காரணத்தினால் அவருக்கு ஓரளவு பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இது விசேட பாதுகாப்பு ஏற்பாடாக அமையாது என சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக