30 செப்டம்பர், 2010

புலிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவினை கனேடிய அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் : ஜீ.எல்.பீரிஸ்

புலிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவினை கனேடிய அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இதனால் இலங்கையின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கனடாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிச் சக்திகள் தற்போது கனடாவை மையமாகக் கொண்டு இயங்கி வருவதாகவும், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், சில புலி ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் தமது செயற்பாடுகளை மேற்கொள்வதில் முனைப்பு காட்டப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடா உள்ளிட்ட நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் செயற்பட்டு வருவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் லோரன்ஸ் கனோனிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக கனேடிய உயர் அதிகாரியொருவர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிச் சக்திகளை இல்லாதொழிப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இலங்கை வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சன் சீ மற்றும் ஓசியான் லேடி புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலும் இரு நாட்டு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இலங்கையில் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும், எந்த காரணத்திற்காகவும் நாட்டை விட்டு தப்பிச் சென்று புகலிடம் கோர வேண்டிய அவசியம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றம் உள்ளிட்ட யுத்தத்தின் பின்னரான மறுவாழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் கனடா திருப்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக