30 ஆகஸ்ட், 2010

வெள்ள நிவாரணப்பணி: இந்திய உதவியை ஐ.நா. மூலமாக ஏற்க பாகிஸ்தான் முடிவு

வெள்ள நிவாரணப்பணிக்கு இந்தியா கொடுக்கும் நிதி உதவி ஐநா அமைப்புகள் மூலம் ஏற்கப்படும் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் வெள்ள நிவாரணப் பணிகளில் ஐநா அமைப்புகள் ஈடுபட்டுவருகின்றன. அத்தகைய அமைப்புகள் மூலமாக இந்தியா தனது நிதியுதவியை வழங்கலாம் என்று வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அப்துல் பாசித் நிருபர்களிடம் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் பல பகுதிகள் எப்போதும் இல்லாத அளவுக்கு பலத்த மழை வெள்ளம் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இரு வாரங்களாக பெய்யும் பலத்தமழை காரணமாக சுமார் 1700 பேர் பலியாகிவிட்டனர். பல லட்சம் ஹெக்டேர் பரப்பு விவசாயப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. மேலும் 12 லட்சம் வீடுகள் மழை, வெள்ளத்தில் இடிந்துவிட்டன. 2 கோடி பேர் வெள்ள பாதிப்பால் தத்தளிக்கின்றனர்.

இந்நிலையில் இந்தியா பாகிஸ்தானின் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 50 லட்சம் டாலர் நிதி உதவியை அறிவித்தது. இதை வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பாகிஸ்தான் அமைச்சர் ஷா முகம்மது குரேஷியை ஆகஸ்ட் 13ம்தேதி தொடர்புகொண்டு தெரிவித்தார். ஆகஸ்ட் 19ம் தேதி பிரதமர் யுசுப் ரசா கிலானியை தொடர்பு கொண்டு பேசிய மன்மோகன் சிங்கும் இந்திய உதவி பற்றி பேசினார். இருதரப்பு உறவு கசந்துள்ள நிலையில் இந்த உதவியை பெறுவதில் பாகிஸ்தான் தயக்கம் காட்டியது. இதற்கிடையே, மனிதாபிமான உதவி விஷயத்தில் வேறு பிரச்னையைக் கலக்கக்கூடாது என அமெரிக்கா அறிவுரை வழங்கி உதவியை ஏற்கும்படி வலியுறுத்தியது.

அதன்படி இந்திய உதவியை ஏற்ற பாகிஸ்தான் அந்த உதவியை எப்படி ஏற்பது என்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று அறிவித்தது.

இந்நிலையில் இந்திய உதவியை நேரடியாக பெறுவதில்லை என முடிவு செய்துள்ள பாகிஸ்தான் ஐநா அமைப்புகள் மூலமாக வாங்கிக் கொள்வது என தீர்மானித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக