20 ஆகஸ்ட், 2010

நல்லவிடயம் நடக்கும் என்று நம்புகின்றோம்:நீல்புனே

கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எவ்வாறு அமையும் என்று தற்போது கூற முடியாது. காரணம் தற்போதுதான் அதன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்னன.

எனினும் நல்ல விடயம் நடக்கும் என்று நம்புகின்றோம். இவ்வாறு நடைபெறுவது சிறந்ததாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல்புனே தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் விடயத்தில் அரசாங்கம் கணிசமான வேலைத்திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுடன் நான் உரையாடியபோது அவர்கள் தமது வாழ்க்கை வழமைக்கு திரும்பவேண்டும் என்றும் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவேண்டும் என்றும் விரும்புவதை அறிய முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வீரகேசரி நாளிதழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல்புனே மேற்கண்டவாறு கூறினார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது

சிறந்த சந்தர்ப்பம்

இடம்பெயர்ந்த மக்களில் 90 வீதமானோர் தற்போது தமது இருப்பிடங்களுக்கு திரும்பியுள்ளனர். சிறந்த வகையிலான சமாதானத்தையும் பொருளாதார அபிவிருத்தியையும் மேற்கொள்வதற்கு தற்போது அரிய வாய்ப்பை நாடு பெற்றுள்ளது. முன்செல்லவேண்டியுள்ளது. சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

சிறந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

பல தடவைகள் மீள்குடியேற்றப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு விஜயம் செய்துள்ளேன். கடந்த மாதமும் அப்பகுதிளுக்கு சென்றேன். இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் அனைவரும் சிறந்த முறையில் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவே முயற்சிக்கின்றனர். அதிகளவான மக்களை மீள்குடியேற்றுவது என்பது இலகுவான விடயமல்ல.“ நிலக்கண்ணிவெடிகளை அகற்றவேண்டிய தேவையும் உள்ளது. எனினும் சிறப்பான வேலைத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் மீள்குடியேறியவுடன் மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை பெற்றுக்கொடுப்பது சில நாடுகளில் தான் இடம்பெற்றுள்ளது. மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு அதிகளவான தேவைகள் உள்ளன.

உரையாடினேன்

அதிகமான இடம்பெயர்ந்த மக்களுடன் நான் உரையாடியுள்ளேன். அவர்கள் தமது வீடுகள் மீள அமைக்கப்படவேண்டும் என்று விரும்புகின்றனர். வாழ்க்கை தரம் முன்னேறவேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். எவ்வாறெனினும் குறிப்பிட்டுக்கூறக்கூடிய வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூற முடியும்.

இலங்கையுடன் ஒத்துழைப்பு

கடந்த 50வருடங்களாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றது. எனினும் கடந்த இரண்டு வருடங்களாக அதிகமாகவே செயற்படுகின்றோம். எமக்கு சிறிய வகிபாகமே இங்கு இருந்தாலும் விசேட மற்றும் குறிப்பிடக்கூடிய நிலைமைகளில் எங்களின் செற்பாடும் வகிபாகமும் அதிகரிக்கும்.

என்னுடன் தொடர்புபட்டதல்ல

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் இலங்கை தொடர்பில் ஆலோசனை பெறுவதற்கு நியமித்துள்ள ஆலோசனை சபையானது ஐ.நா.வின் தலைமை மற்றும் உயர்மட்ட செயற்பாடாகும். அது வெளிக்கள வேலைத்திட்டங்களுடன் தொடர்புபட்டதல்ல. எனவே நான் அவ்விடயம் குறித்து ஒன்றும் கூற முடியாது. தற்போது பொருளாதார ரீதியில் சிறந்த இடத்துக்கு செல்வதற்கு இலங்கைக்கு சந்தர்ப்பம் உள்ளது. கடந்த காலங்களில் யுத்தம் நிலவியபோது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 வீதத்தில் காணப்பட்டது. தற்போது யுத்தம் முடிந்துவிட்டது. நிலைமைகள் மாறியுள்ளன. எனவே சிறந்த இடத்துக்கு செல்ல முடியும்.

நட்ட ஈடுகள்

கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் கூறுவதற்கு இது ஆரம்பம் அதிகம் என்று கருதுகின்றோம். அந்த ஆணைக்குழுவின் அமர்வுகள் தற்போது ஆரம்பித்துள்ளன. அந்த ஆணைக்குழு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடுகளை வழங்குவது தொடர்பிலும் ஆராய்வதாக தெரிகின்றது. இது சிறந்த விடயமாகும். எனினும் தற்போது ஆரம்பமாகியுள்ளது இறுதி முடிவை எம்மால் எதிர்வு கூற முடியாது. தென்னாபிரிக்காவில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டபோது இறுதி வரை எதிர்வு கூற முடியாதிருந்தது. இலங்கையின் ஆணைக்குழு சிறப்பான முடிவை தரும் என்று எதிர்பார்க்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக