14 ஜூலை, 2010

சகல கட்சிகளுடனும் அரசியலமைப்பு திருத்தம் குறித்துப் பேச்சு:ஐ.தே.க

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் அதேவேளை ,பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

சிறுபான்மை இனப் பிரதிநிதித்துவம் குறையாத வகையிலான தேர்தல் முறை மாற்றத்துக்கே ஐ.தே.க. ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார். கொழும்பில் எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

நிறைவேற்று அதிகார முறைமையுடனான பிரதமர் பதவி, அரசியலமைப்பு திருத்தங்கள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறை மாற்றங்கள் தொடர்பாக ஐ.தே. கட்சி தொடர்ந்தும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும். இப் பேச்சுக்களின் போது 17ஆவது திருத்தச் சட்டம், சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படுவதோடு எமது கட்சி சார்பில் அதனை வலியுறுத்துவோம்.

அதேவேளை இவ் விடயங்கள் தொடர்பாக ஐ.தே.முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுடனும் எதிர்வரும் நாட்களில் எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்த தீர்மானித்துள்ளார்.

இப் பேச்சுவார்த்தைகளை நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையாகவுமே நாம் நடத்துகிறோம். அதேவேளை உள்ளூராட்சி தேர்தல் முறை மாற்றங்கள் தொடர்பாக அரச தரப்பினரை இன்று (நேற்று) சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம்.

இதன் போது சிறுபான்மை பிரதிநிதித்துவம் தொடர்பில் அதிக கவனத்தை செலுத்துவோம். தொகுதிவாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறை கலந்த ஒரு திட்டத்தை தயாரிக்கவும் அதன் மூலம் சிறுபான்மை இனத்தவருக்கு அநீதி ஏற்படாத விதத்தில் நியாயம் பெற்றுக் கொடுக்கவும் ஐ.தே. கட்சி முன்னிற்கும்.

விகிதாசார முறை கைவிடப்பட்டு தொகுதி வாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டால் சிறுபான்மை இன பிரதிநிதித்துவம் குறையும். இதன் போது அதனை அதிகரிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பிலும் அரச தரப்பினருடன் கலந்தாலோசிக்கவுள்ளோம்.

ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது வட பகுதி மக்களின் மீள் குடியேற்றம், மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாகவே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எனவே திருத்தங்கள் தொடர்பில் நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம்.

போராட்டம் தொடரும்

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதும் மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுப்பதற்கான எதிர்ப்பு போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன. வரிச் சுமைகள் மக்கள் மீது சுமத்தப்படுகின்றன. யுத்தம் முடிந்தும் மக்களுக்கு சலுகைகளை அரசாங்கம் வழங்கவில்லை.

அத்தோடு ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தும் போராட்டங்களும் அரசியலமைப்பு திருத்தங்கள் மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயப்பதாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியும் நாடு முழுவதுமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஐ.தே. கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக