27 ஏப்ரல், 2010

பிரபாகரன் தாயார் சிகிச்சைக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்: கரு​ணா​நி​தி​யி​டம் வலி​யு​றுத்​தல்





சென்னை, ஏப். 26: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் முதல்வர் கருணாநிதியை திங்கள்கிழமை இரவு அவரது வீட்டில் சந்தித்துப் பேசினர்.

இது குறித்து சுப. வீரபாண்டியன் கூறியதாவது:

மலேசியாவிலிருந்து சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16-ம் தேதி இரவு விமானம் மூலம் சென்னை வந்த பார்வதி அம்மாள், மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார். அவர் சென்னையில் சிகிச்சை பெற விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதினால், அதற்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெற்று, அவரது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் வலியுறுத்தினோம்.

அதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி, பார்வதி அம்மாள் கடிதம் எழுதினால், மத்திய அரசிடம் நிச்சயம் அனுமதி பெற்று, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார் என்று சுப. வீரபாண்டியன் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக