23 மார்ச், 2010

பங்களாதேஷ் இராணுவ உயர் அதிகாரிகள் குழு இலங்கை வருகை





பங்களாதேஷ் இராணுவத்தின் எட்டு உயர் அதிகாரிகள் அடங்கிய குழு இலங்கை வந்துள்ளது. இந்த உயர் மட்டக் குழுவினர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. இரு இராணுவங்களுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இலங்கை இராணுவம் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ள நிலையில் இரு நாடுகளும் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

பங்களாதேஷைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் முஹம்மட் இஹ்திஸாம் உல் ஹக் மற்றும் மேஜர் ஜெனரல் ஏ. கே. எம். சபருல்லாஹ் சித்தீக் ஆகியோர் வன்னி இராணுவ நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் முடிவில் பங்களாதேஷ் இராணுவ குழுவினர் இலங்கை இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கினர். இந்த சந்திப்பின்போது இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகரும் கலந்துகொண்டார்.

இராணுவத் தளபதியுடனான சந்திப்பை அடுத்து இராணுவத் தலைமையகத்தின் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த எட்டு உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தியத்தலாவ இராணுவ அகடமி, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம், முல்லைத்தீவு மற்றும் வன்னி பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

மேஜர் ஜெனரல் இஹ்திஸாம் உல் ஹக், மேஜர் ஜெனரல் ஏ. கே. எம். சபருல்லாஹ் சித்தீக், பிரிகேடி யர் ஜெனரல் ரித்வான் அல் மஹ் மூத், லெப்டினன்ட் கேர்ணல் முஹ ம்மத் அஸதுல்லாஹ் மின்ஹாசுல் அலம், லெப்டினன்ட் கேர்ணல் எம். தெளபீக்குல் ஹஸன் சித்தீக், மேஜர் ஏ. எஸ். எம். பஹவுத்தீன், மேஜர் எம். டி. நஸ்ருல் இஸ்லாம் கான் மற்றும் மேஜர் சகாவத் ஹொஸைன் செளத்ரி ஆகியோரே இலங்கை வந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக