22 மார்ச், 2010

கேட்டதெல்லாம் நான் தருவேன்

தனித் தமிழீழம் என்று பிளிறிக் கொண்டிருந்த யானை தன் தலையில் மண்ணை வாரிப்போட்டு வருடம் ஒன்றாகப் போகிறது.பொடியள் எங்களுக்கெண்டு ஒரு நாடெல்லே எடுத்துத் தரப் போறாங்கள் " என்று பார்த்துப் பார்த்துப் பூத்துப் போன விழிகளுடன் புதைந்து போன மக்கள் ஆயிரம், ஆயிரம்.


சர்வதேச அரசியலைக் கணக்கெடுக்க வல்லமை அற்றவர்கள் உசுப்பேற்றி உணர்ச்சி பூர்வமான பேச்சுக்களின் மூலம் உக்கிரமான போரில் தம்மிடமிருந்த மீதமான தமிழ் நிலத்தையும் பறிகொடுத்து விட்டு மாயமாகிப் போன நிலை.


மக்களின் விடுதலை என்பதன் வரைவிலக்கணத்தை அறியாமல் பயாஸ்கோப்புப் போராட்டம் நடத்தி விட்டு, சரி இனிப் படம் முடிந்து விட்டது வீட்டுக்குப் போங்கள் என்று கூறுவதைப் போல அனைத்தையும் தொப்பென்று போட்டு விட்டுத் தலைதெறிக்க ஓடி விட்ட நிலை.


தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்து கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டவர்களின் தலைமையில் உங்களின் உரிமைகளை வென்றெடுப்போம் என்னும் கனவில் கண்களைக் கட்டித் தமிழ்மக்களை அழைத்துச் சென்று பாதாளத்தில் தள்ளி விட்ட நிலை.


இவை நடந்து முடிந்தவை.


ஈழத்துத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களது அரசியல் நிலை தெரிந்தோ தெரியாமலோ பிரபாகரனின் மறைவுக்கு முன், மறைவுக்குப் பின் என்று இரண்டு வெவ்வேறு காலக் கண்ணாடிகளினூடாக பார்க்கப்பட வேண்டிய துரதிருஷ்ட நிலை.


பிரபாகரன் இறந்து விட்டாரா ? இல்லையா ? என்ற ஆரய்ச்சிக்குரிய வேளையல்ல இது. எமது இனம் விடுதலை என்னும் இலக்கை நோக்கி அழைத்துச் செல்லப்பட்ட பாதையின் சுவடுகளை அவதானமாக ஆராய வேண்டிய நிலை.


எமது இன்றைய நிலைக்கு பிரபாகரன் என்னும் தனி மனிதன் அன்றித் தமிழீழ விடுதலைப் புலிகள் என்னும் தனிப்பட்ட இயக்கம் மட்டும் தான் காரணமா?


பிரபாகரனும் ஒர் தமிழன்னை ஈன்றெடுத்த பிள்ளை தான், கண்ணை மூடிக்கொண்டு மூளைச்சலவைகளினா;;ல் பிரபாகரனின் பின்னே அணிவகுத்துச் சென்று தம் அன்னை நாட்டுக்காக தமதுயிரை அர்ப்பணித்த இளம் தளிர்களும் எம் சகோதரர்கள் தான்.


பிரபாகரன் தன்னுடைய வசதியான வாழ்க்கைக்காக ஈழப் போராட்டம் என்னும் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஏனெனில் அப்போதைய காலகட்டத்தில் அவரையொத்த பல 17 வயது இளைஞர்கள் தமது வசதியான வாழ்க்கைக்குத் தேவையான வகையில் நாட்டை விட்டு வெளியேறி மிகவும் மகிழ்வாக வாழ்ந்திருக்கிறார்கள்.


ஓர் தூயஎண்ணத்துடன் தனது பயணத்தை ஆரம்பித்த பிரபாகரன் என்னும் 17 வயது இளைஞன் தன் தலையில் தானே மண்னை அள்ளிப் போட்டுக்கொள்லக்கூடிய ஓர் நிலைக்கு மாற்றம் அடைந்ததன் காரணம் என்ன?


நாமேதான் . . . .


இதை என்று நாம் உளமார ஏற்றுக்கொள்ளுகிறோமோ அன்றுதான் நாம் உண்மையான பாதையில் எமது பயணத்தை ஆரம்பிக்க முடியும்.


விடுதலைப் புலிகள் மட்டுமல்ல ஈழப்போராட்டத்தில் குதித்திருந்த அனைத்து இயக்கங்களுமே சுயவிமர்சனத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள் என்பதும், சுயவிமர்சனம் செய்தவர்கள் அவர்களின் உயிர்களை உட்கொலைகள் மூலம் இழந்தார்கள் என்பதுவும் மறுக்கப்படமுடியாத சரித்திர உண்மைகள்.


ஒரு விடுதலைப் போராட்டத்தில் அரசியல் அங்கம், அதன் துப்பாக்கி ஏந்தும் ஆயுத அங்கத்தை விட பலம் வாய்ந்ததாக அமையவேண்டும் என்பதைப் புலிகள் உணரவில்லை என்பதுவே உண்மை.


பிரபாகனுக்கு இருந்த சர்வதேச அரசியல் அறியாமையையும், தூய விடுதலை வேட்கையையும் அவரைச் சுற்றியிருந்த அரசியல் அறிவுமிக்க சுயநலவாதிகள் தவறாக வழிநடத்தி விட்டார்கள் என்பதுவே உண்மை.


ஒரு உதாரணத்திற்கு, கடவுள் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்துள்ள ஒருவன் ஒரு விரதம் பூண்டு தனது கண்களை கட்டிக் கொண்டே இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனைச் சுற்றியிருப்பவர்களிலேயே இரவையும், பகலையும், கால நிலையையும் அறிய வேண்டிய நிலையிலிருப்பவனுக்கு எப்போதும் பகல் என்றே சொல்லிக் கொண்டிருந்தல் எப்படி இருக்குமோ அப்படித்தான் பிரபாகரனினதும், அவரைச் சுற்றியிருந்தோரின் நிலையுமிருந்தது.


சரி பிரபாகரன் இப்போது ஈழம் என்னும் நாடகமேடையில் இருந்து மறையவில்லை விரட்டப்பட்டுவிட்டார் என்றே வைத்துக் கொள்வோம். இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் ராஜபக்சே தெரிவாகி விட்டார்.


அடுத்து இப்போ பாராளுமன்றத் தேர்தல் தலைதூக்குகிறது . தமிழ் ஊர்களிலெல்லாம் பிரச்சார மேடைகளில் " கேட்டதெல்லாம் நான் தருவேன் " என்னும் பிரச்சாரம் ஒலிப்பெருக்கிகளிலெல்லாம் ஓங்காரமாய் ஒலிக்கிறது.


அவசரம், அவசரமாகப் புலம் பெயர் தமிழ்ச் சகோதர சகோதரிகள் தமது ஊருக்குச் செல்லும் படலம் ஆரம்பமாகியுள்ளது.


போய் வந்தவர்களின் கருத்துக்கள் இருவகையானவை 1) ஜய்யய்யோ தமிழீழம் என்னும் பேச்சையே இனி எடுக்க வேண்டாம் நாம் பட்டதெல்லாம் போதும் பட்டினத்தாரே என்று ஓலமிடுகிறார்கள் தமிழ் மக்கள் என்பது ஒருவகை 2) தமிழ் நிலங்களிலெல்லாம் சிங்களக் குடியேற்றம், தமிழ்ப் பாடசாலைகளில் பிக்குமார் சிங்களம் கற்பிக்கிறார்கள் போச்சுடா ! நம் நிலம் பறி போச்சுடா ! என்ற ஓலத்துடன் வரும் மக்கள் மறுவகை..


சிங்கள மக்கள் எமது நிலங்களில் அத்துமீறிக் குடியேறுகிறார்கள் என்று ஓலமிடும் அதே புலம்பெயர் மக்கள் அவசரம் அவசரமாக தமக்குச் சொந்தமான வடபகுதி நிலங்களை யார் அதிக விலை தருகிறார்களோ அவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


வெறும் வாய்ப் பேச்சுக்காகவோ என்னவோ , மஹிந்தாவும், அவர் சார்ந்த அமைச்சர்களும் " புலம் பெயர் தமிழ் மக்களே ! வாருங்கள் வந்து உங்கள் வட,கிழக்குப் பகுதிகளை எம்முடன் சேர்த்து மீளக்கட்டியெழுப்பும் பணியில் இணையுங்கள் " என்று அறைகூவல் விடுத்தனர்.


இத்தனை காலமும் "போர், போர், . . . புலிகளே பொருதுங்கள் எமது மண்ணை சிவந்த மண் ஆக்குங்கள் " என்று கத்திக் களைத்து விட்ட நாம் இப்போது உண்மையான, நேர்மையான உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பவர்களாயிருந்தால் என்ன செய்யவேண்டும் ?


மகிந்தாவின் அழைப்பு போலியா ? அல்லது உண்மையா ? என்பதை பரீட்ச்சித்துப் பார்க்கும் மனவலிமை கொள்ள வேண்டும். எமது போர்ப்பசிக்குத் தம்மை இரையாக்கிய எமது இன்னுயிர் தொப்புள் உறவுகளின் சுபீட்சமே தற்போது எம்முன்னால் காத்திருக்கும் பணி என்பதை ஏற்று எமது பகுதிகளை மீளக் கட்டியமைப்பும் பணிகளில் ஈடுபட வேண்டும்.


ஆனால் இன்றும் புலம்பெயர் நாடுகளில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் ? கைகளில் விஸ்கிக் கிண்ணத்துடன் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா ? இல்லையா ? அவர் எப்போது நம்முன்னே காட்சியளிக்கப் போகிறார் என்னும் வீண் விவாதங்களில் ஈடுப்பட்டுக் கொண்டு, நாடு கடந்த தமிழீழ அரசு என்னும் மற்றொரு வேதாளத்தை முருங்கை மரத்திலிருந்து இறக்கிக் கொண்டிருக்கிறோம்.


பல்வேறு அரசியல் கட்சிகளாக பிரிந்து நின்று இன்னமும் எமது எஞ்சியுள்ள புலி விசுவாசத்துக்காய் எமது மக்களை பலியாக்க எத்தனிக்கிறோம்.


சமீபத்தில் இலங்கை வந்த நிருபமா ராவ் என்ன கூறினார் " அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஓரே கோரிக்கையை முன்வைப்பதுவே இந்திய அரசாங்கம் தீர்வை வலியுறுத்த நீங்கள் செய்யக்கூடிய முக்கியமான செய்கை " என்பதுவே.


அது மட்டுமா ?


சமீபத்தில் பத்திரிகை ஒன்றிற்குப் பேட்டியளிக்கையில் மகிந்த என்ன கூறியிருக்கிறார் ? தமிழர்கள் பல அணிகளாக நின்று கொண்டிருக்கிறார்கள், வடக்கு-கிழக்கு இணைப்பு என்னும் பேச்சுக்கே இடமில்லை. சமஸ்டி அமைப்பு என்பதை மொழிவது எனது அரசியல் தற்கொலைக்குச் சமானம் என்று கூறியிருக்கிறார்.


இதிலிருந்து எமக்கு என்ன தெரிகிறது ? அனவரும் ஈழத்தமிழர்களுடைய எமது சுயநலப் போக்கை நன்கு அறிந்திருக்கிறார்கள். பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் அழிக்க எனக்கு உதவுங்கள் நான் உங்களுக்கு கேட்டதெல்லாம் தருவேன் என்ற மகிந்த இன்று ஓர் கடினமான நிலைப்பாட்டை எடுக்க என்ன காரணம் ?


ஈழத்தமிழர் என்றுமே ஒற்றுமையாக கோரிக்கையை முன்வைக்கமாட்டார்கள் என்பதை அவர் நிச்சயமாக அறிந்ததனாலேயே .


சுதந்திரம், சுபீட்சம், தனிமனித சுதந்திரம் இவையெல்லாம் முதலில் எம்மால் எமக்கு கொடுக்கப்படவேண்டும். தேர்தலில் பலர் குதித்திருப்பது இச்சுதந்திரத்தின் முதல் கட்டம், அதன் இரண்டாவது கட்டமாக வேறுபாடுகளைக் களைந்து எமது மக்களின் அமைதியான, கெளரவமான வாழ்க்கை என்னும் அடிப்படை கோரிக்கையில் அனைத்து தமிழ்ப்பிரிவினரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்..


இதுவே இன்று எம் அனைவரின் முன்னால் உள்ள தலையாய கடமை. சுதந்திரமாக வாழத்துடிக்கும் எம் மக்களுக்கு அந்நிலை வரும் போது பிரபாகரன் தான் அவர்களுக்குத் தலைமை வகிக்க வேண்டும் என்னும் எணத்தைக் கைவிடுங்கள்.


பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அவர் எங்கிருந்தாலும் அங்கு அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழட்டும்.


அதற்காக எமது மக்களின் வாழ்வில் மீண்டும் சூறாவளியை உருவாக்கும் முயற்சியில் மீண்டும் இறங்காதீர்கள். அமைதியையும், சந்தோஷத்தையும் இழந்து தமது இளம் சிறார்கள் பலரை கொடிய போருக்கு விலையாகக் கொடுத்த அவர்கள் நிம்மதியாக மூச்சு விட அவகாசம் கொடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக