22 மார்ச், 2010

நாட்டைக் காட்டிக் கொடுக்கும் சக்திகளை ஒழிக்கும் பலத்தை மக்கள் வழங்க வேண்டும்




பலமான ஆட்சியமைக்க ஆதரவு கோருகிறார் பிரதமர்
அரசாங்கத்தின் துரித அபிவிருத்திப் பயணத்தைத் தடுத்து நிறுத்தி நாட்டைக் காட்டிக் கொடுக்கும் சூழ்ச்சிகளில் ஈடுபடும் தேசிய சர்வதேச சக்திகளை இல்லாதொழி ப்பதற்கான பெரும்பான்மை பலத்தை நாட்டு மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரசாங்கத்துக்கு வழங்க வேண்டுமென பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்க தெரிவித்தார்.

பலமான பாராளுமன்றம் இல்லாவிட்டால் நிறைவேற்று ஜனாதிபதி முறையும் பயனற்றதே என தெரிவித்த பிரதமர் முக்கியமான சட்டமூலங்களை நிறைவேற்றமும் பாரிய மாற்றங்களை நாட்டில் ஏற்படுத்தவும் மூன்றிலிரண்டு பெரும்பான் மையைக் கொண்ட பாராளுமன்ற பலத்தை அரசாங்கத்துக்குப் பெற்றுத்தர வேண்டுமெனவும் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக்கூட்டம் நேற்று சிலாபம் நகரில் நடைபெற்றது.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற இப் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர்கள் மில்றோய் பெர்னாண்டோ, நியோமல் பெரேரா உட்பட அமைச்சர்கள், வேட்பாளர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் மேலும் தெரிவித்ததாவது:-

ஏப்ரல் 8ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தேசிய சர்வதேச நீதியில் முக்கிய செய்தியைக் கூறும் தேர்தலாகும். தேசிய சர்வதேச ரீதியில் பல சுயாதீன அமைப்புக்கள் அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றன.

கடந்த மாதங்களில் கோடிக்கணக்கான டொலர்கள் வந்து சேர்ந்துள்ளன. இவை எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. இதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இது மோசமானதொரு செயலாகும். இதில் தேசிய மற்றும் சர்வதேச சக்திகள் தொடர்புபடுகின்றன.

நாட்டைக் காட்டிக்கொடுப்பதிலும், நாட்டில் மனித உரிமை மீறல் இடம்பெறு வதாகக் கூறி மோசமான பிரசாரங்களில் ஈடுபடுவதிலும் இச்சக்திகள் முனைப்பாக செயற்படுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த போதிய பலத்தைப் பெற்றுத் தருவகையில் பொதுத் தேர்தல் வெற்றி அமைவது அவசியம்.

உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டின் பலமான சக்திகள் தலையிடக்கூடாது என வியன்னா தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. எமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற் கான பலமும் உரிமையும் போதியளவு எமக்குண்டு.

எமது விவகாரங்களில் தலையிட வேண்டாமென நாம் வெளிநாடுகளைக் கேட்டுக்கொள்கிறோம். சில ஐரோப்பிய நாடுகள் இன்னும் கூட இலங்கையை ஒரு அடிமை நாடாகவே நடத்தப்பார்க் கின்றன. இலங்கை தனித்துவமும் கெளரவமும் உரிமையுமுள்ள நாடு. சிறிய நாடாகவிருப் பினும் கலாசாரம் மற்றும் ஒழுக்கங்களில் சிறந்து விளங்கும் நாடு இது.

முழுமையான உரிமைகொண்ட எமது நாட்டில் நாம் எவ்வாறு ஆட்சி செய்வது என்பதை ஐரோப்பிய நாடுகள் எமக்குச் சொல்லித்தர வேண்டிய அவசியம் கிடையாது. நாம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கோருவது தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தற்போதுள்ள அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவந்து தேர்தல் முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதே எமது நோக்கம் என்றார்.

ஏ. எச். எம். அஸ்வர்: (ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்)

ஆறு வருடகால ஆட்சியைப் பொறுப் பேற்று அதனை நான்கு வருடத்தில் நிறைவு செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இக்காலத்தில் மஹிந்த சிந்தனைத் திட்டம் மூலம் முழு நாட்டையும் பாரிய அபிவிருத்திக்கு உட்படுத்தியுள்ளார்.

வடமேல் மாகாணத்தில் கொழும்புக்கு அடுத்தபடியாக தமிழ், முஸ்லிம் மக்கள் பறந்து வாழ்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களாகவிருந்த அவர்கள் அனைவரும் தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் உள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட விருந்த ராமின் பெயர் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் இதனால் அதிருப்தியடைந்துள்ளனர். கொழும்பு செட்டித்தெரு, பிரதான வீதி உட்பட பிரபல வர்த்தகர்கள் கொழும்பு வாழ் தமிழ் மக்களனைவருமே தற்போது ஜனாதிபதியுடன் உள்ளனர்.

எதிர்வரும் ஏப்ரல் 8ம் திகதி வடமேல் மாகாணம் குறிப்பாக புத்தளம் மாவட்ட தமிழ், முஸ்லிம் மக்கள் வெற்றிலைக்கு வாக்களித்து ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது உறுதி.

சரத் கோங்கஹகே: (சட்டத்தரணி)

சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவது இது முதற் தடவையல்ல. 1970ம் ஆண்டிலும் அவர் தாம் செய்த குற்றத்திற்காக இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழில் உரையாற்றுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவரைப் போடா என கொச்சைத் தமிழில் கூறினார்.

இன்று கலைஞர்களைத் தூற்றும் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தபோது அவர்களுக்காகத் துதிபாடியவர் என தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மில்றோய் பெர்னாண்டோ, அப்துல் பாயிஸ் நியோமல் பெரேரா உட்பட பதினொரு வேட்பாளர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக