1 மார்ச், 2010

மூன்று பிரதான கட்சிகளும் இன வாதத்தையே பரப்பி வருகின்றன : விக்கிரமபாகு



நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மூன்று பிரதான அரசியல் கட்சிகளும் இனவாதத்தைப் பரப்பி வருகின்றன.

இதனால் சிறுபான்மை இன மக்கள் ஓரங்கட்டப்படுவதுடன் தமது உரிமைகளுக்காக மீண்டும் போராட வேண்டிய அபாய நிலை உருவாகப் போகின்றது என இடதுசாரி விடுதலை முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

இலங்கை நாடாளுமன்றத்திற்கு சிறுபான்மை இன மக்களின் அரசியல் பிரதிநிதித்துவங்கள் நிச்சயமாக இடம்பெற வேண்டும். இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் செயற்படக் கூடாது எனவும் அவர் கூறினார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவர் தொடர்ந்தும் தெளிவுபடுத்துகையில்,

"இன்று இலங்கையில் பொது மக்கள் அரசியல் ரீதியாகவும் இன ரீதியாகவும் பிரிந்துள்ளனர். இதற்குப் பிரதான காரணம் அரசியல் கடசிகளின் செயற்பாடுகளே. தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக இனவாதத்தை அரசியல் இலாபப் பொருளாக உள்நாட்டு அரசியல்வாதிகள் தேர்தல் மேடைகளில் பயன்படுத்துகின்றனர்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கூட்டணி மற்றும் ஜே.வி.பியின் ஜனநாயக தேசிய முன்னணி ஆகிய மூன்று பிரதான அரசியல் கட்சிகளுமே தமது தேர்தல் மேடைகளில் தமிழ்-சிங்கள மக்களிடையே பேதத்தை ஏற்படுத்தும் வகையிலேயே பிரசாரங்களை மேற்கொள்கின்றன.

இன ஐக்கியம், இன ஒற்றுமை என்பன வெறும் வார்த்தைகளாகவே காணப்படுகின்றன. வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழும் பொது மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை முன் வைக்க வேண்டும். மீண்டும் பிரிவினைவாத, இனவாத தூண்டுதல்களுக்கு இடமளிக்கக்கூடாது.

ஆனால் பிரதான அரசியல் கட்சிகள் இனவாதத்தையே அரசியல் இலாபப் பொருளாக கொள்கின்றன" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக