24 பிப்ரவரி, 2010

உலகத் தமிழர் பேரவை கூட்டத்தில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர்




உலகத் தமிழர் பேரவை கூட்டத்தில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர்
பிரிட்டன் நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை என்னும் அமைப்பின் கூட்டத்தில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் கலந்து கொண்டதை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை முன்வைத்து செயற்பட்டு வருகின்ற இந்த உலகத் தமிழர் பேரவை என்னும் அமைப்பை, விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவு அமைப்பாக குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை அரசாங்கம் அதில் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் கலந்துகொள்வது இலங்கையின் இறைமையை குறைத்து மதிப்பிடும் செயலாக அமையும் என்று கவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கைக்கான பதில் பிரிட்டிஷ் தூதுவர் மார்க் கூடிங் அவர்களை அழைத்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம அவர்கள், தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

பெரும்பாலும் மேற்கு நாடுகளில் இயங்கும் விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புக்களை ஒரு குடையின் கீழ் இணைத்து செயற்படும் அமைப்பாக உலக தமிழர் பேரவையை விபரித்துள்ள இலங்கை வெளியுறவு அமைச்சின் அறிக்கை ஒன்று, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்குவதற்கான முதற்கட்ட பணிகளில் அந்த அமைப்பு செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது இலங்கையின் இறைமைக்கும், ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கும் ஒரு நகர்வு என்றும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

ஆகவே இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அங்கு அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவத்ற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்குமானால், உலக தமிழர் பேரவையின் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளக் கூடாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

ஆனால், இன்று காலையில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற கட்டடத்தில் நடந்த அந்தக் கூட்டத்தின் ஆரம்ப வைபவத்தில் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

அரசியல் தீர்வு

அங்கு உரையாற்றிய அவர், இலங்கை பிரச்சினைக்கு ஒரு அமைதியான, அரசியல் தீர்வுதான் ஒரே வழி என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அந்த தீர்வு எப்படியானதாக இருக்க வேண்டும் என்பதை அனைத்து இலங்கை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உண்மையான தேசிய நல்லிணக்கத்தின் மூலம் ஒரு இறுதியான தீர்வை இலங்கை அடைய வேண்டும் என்பதே பிரிட்டனின் அவா என்றும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

இந்த இலக்குக்காக செயற்படுகின்ற இலங்கையின் அனைத்து மக்களுடனும்- அவர்கள் இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ எங்கு இருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து பிரிட்டன் சேர்ந்து செயற்படும் என்றும் மிலிபாண்ட் அவர்கள் உலகத் தமிழர் பேரவையின் கூட்டத்தில் பேசியுள்ளார்.

அத்துடன் இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது இருதரப்பாலும் மேற்கொள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகின்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்ப்பட வேண்டும் என்றும் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இன்னமும் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் எஞ்சியுள்ள மக்கள் மீள் குடியேற்றப்படுவதுடன், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் விடுததலை செய்யப்பட்டு, மறுவாழ்வளிக்கப்பட வேண்டும் என்றும் டேவிட் மிலிபாண்ட் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக