24 பிப்ரவரி, 2010

இலங்கைப் பிரச்சினைக்குப் புதிய திட்டம் தேவை : டேவிட் மிலிபாண்ட் வலியுறுத்து


இலங்கையின் தேசிய பிரச்சினை தீர்வுக்கு புதிய திட்டம் ஒன்றை உடனடியாக அமுலாக்க வேண்டும் என பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டேவிட் மிலிபாண்ட், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப்புலிகள் கடந்த வருடம் மே மாதத்துடன் தோற்கடிக்கப்பட்டதில் இருந்து, இலங்கையின் நிலவரம் குறித்து சர்வதேச ரீதியாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உயரிய வாய்ப்பு காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் நாட்களில் லண்டனில் நடைபெறவுள்ள உலக தமிழர் மாநாட்டில், டேவிட் மிலிபாண்ட் கலந்து கொண்டு, இது தொடர்பில் வலு சேர்க்கவிருப்பதாக பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் டேவிட் மிலிபாண்ட், உலகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளமை, இலங்கை அரசாங்கத்துக்கும் அவருக்கும் இடையிலான உறவை மேலும் விரிசலடையச் செய்யலாம் என பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகத் தமிழர் மாநாடு, தமிழீழ கோட்பாட்டை வலியுறுத்தி நிகழ்த்தப்படுவதன் காரணமாகவே இந்தக் கருத்து நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மிலிபாண்ட் இலங்கையின் சிறுபான்மை மக்கள் தமது உரிமைகளையும், பிரச்சினைக்கான தீர்வையும் பெறுவதற்கு சில சாதகமான கருத்துக்களையே வெளியிட்டுள்ளதாகப் பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மோசடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவதாகவும் இதனைத் தகர்க்கும் வகையில் துரிதமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்தை பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக