1 ஏப்ரல், 2011

அரசாங்கம் கூட்டமைப்புடன் தொடர் சந்திப்புக்களை நடத்தவேண்டும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி மீள்குடியேற்றம் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தொடர் சந்திப்புக்களை நடத்தவேண்டும். வடக்கு கிழக்கு மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே அதிகளவில் கடந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடையிலான சந்திப்புக்கள் தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதிக வெற்றிகளை ஈட்டிக்கொண்டுள்ளது. அதாவது மக்கள் அந்தக் கட்சிக்கு அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

எனவே இதனை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என்பதுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி மீள்குடியேற்றம் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தொடர் சந்திப்புக்களை நடத்தவேண்டும். வெறுமனே பேச்சுக்களை நடத்திக்கொண்டிருக்காமல் ஆக்கபூர்வமாகவும் செயற்பாட்டு ரீதியாகவும் செயற்பட்டு தீர்மானங்களை எடுக்கவேண்டியது அவசியமாகும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையை அரசாங்கம் மதித்து அவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும். ஏற்கனவே சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக அறிகின்றோம். பேச்சுக்கள் ஆக்கபூர்வமாக அமையவேண்டும். அரசியல் தீர்வு தொடர்பில் நகர்வுகள் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக