11 பிப்ரவரி, 2011

நேரகாலத்துடன் விமான நிலையத்துக்கு வருமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தல்



கட்டுநாயக்க, பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தினூடாக எதிர்வரும் 12ஆம், 13ஆம் திகதிகளில் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள், தாம் பயணம் செய்யவுள்ள விமானம் புறப்படுவதற்கு 4 மணித்தியாலங்களுக்கு முன்னராகவே விமான நிலையத்திற்கு வர வேண்டும் என்று ஸ்ரீலங்கன் விமான நிலையத்திற்கு செல்லும் இலங்கை கனடா நட்புறவு வீதி மூடப்படுவதன் காரணமாகவே நேரகாலத்துடன் விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் செல்லுமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக விமான சேவைகள் நிறுவனத்தின் விமான நிலைய முகாமையாளர் எச். எஸ். ஹெட்டியாராச்சி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் இலங்கை கனடா நட்புறவு வீதியோடு இணைந்ததாகவுள்ள புகையிரதப் பாதை புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. இதன்பொருட்டு நாளை சனிக்கிழமை இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை இவ்வீதி ஊடான வாகனப் போக்குவரத்தும் முற்றாக தடைசெய்யப்பட்டிருக்கும்.

இந்த 10 மணித்தியால காலப்பகுதியிலும் விமான நிலையத்தை நோக்கி வரும் பயணிகளின் வாகனங்களை மாற்று வீதிகளினூடாக திருப்பி விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, மாற்று வீதிகளூடாக பயணம் செய்து, விமான நிலையத்தை வந்தடைவதற்கு அதிக நேரம் எடுக்கலம். அதனைக் கருத்திற்கொண்டே விமான நிலையத்திற்கு பயணிகள் நேர காலத்துடன் வர வேண்டியுள்ளது.

கொழும்பிலிருந்து விமானநிலையம் நோக்கி வரும் வாகனங்கள் ஜாஎல, எக்கல வீதியூடாக மினுவாங்கொடையை வந்தடைந்து, அங்கிருந்து ஆடிஅம்பலம வீதிவழியாக விமான நிலைய நுழைவாயிலை வந்தடையும். சீதுவை முச்சந்திக்கு வரும் வாகனங்கள் அங்கிருந்து ரத்தொளுகமை வீதியூடாக பழைய சீதுவை முச்சந்திக்கு திருப்பிவிடப்பட்டு பேஸ்லைன் வீதி, எவரிவத்தை ஊடாக விமான நிலையத்தை சென்றடையும்.

நீர்கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் வாகனங்கள் 18ஆம் மைற்கல் சந்திக்கு அருகிலுள்ள பன்சல வீதியூடாக திரும்பி, துளுண சந்திக்கு வந்து பேஸ்லைன் வீதியூடாக எவரிவத்தையை வந்தடைந்து விமானநிலையத்திற்கு செல்லும்.

நீர்கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் தெல்வத்தை முச்சந்தியில் 50 ஏக்கர் வீதியூடாக பயணித்து கிம்புலாப்பிட்டிய முச்சந்தி வரை சென்று அங்கிருந்து ஆடிஅம்பலம ஊடாக விமான நிலையத்தை சென்றடையலாம். நீர்கொழும்பு பிரதான வீதியின் ஊடாக கல்கந்தை முச்சந்திக்கு வரும் வாகனங்கள் கிம்புலாப்பிட்டி வீதி வழியே ஆடிஅம்பல ஊடாக விமான நிலையத்தை அடையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக