11 பிப்ரவரி, 2011

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களிடம் புலனாய்வுத்துறையினர் விசாரணை

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களின் வீடுகளுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்துள்ளனர்.

இதற்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீங்கள் புலி உறுப்பினர் என்றும் உங்களை விசாரிக்க வேண்டும் என்றும் மக்கள் செல்வாக்குமிக்க வேட்பாளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மிரட்டுவதாக தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் அவர் கூறியுள்ளார்.

வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ள அனைவரும் ஒரு வருடத்திற்கும் மேலாக செட்டிகுளம் முகாம்களில் முறையாகப் பதிவுசெய்யப்பட்டு தத்தமது இடங்களுக்கு மீள்குடியேறியவர்கள் என தெரிவித்துள்ளார்.

'புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களும் அரசியலில் ஈடுபட முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் மக்கள் செல்வாக்குள்ள அப்பாவிகளைப் புலனாய்வுப் பிரிவினர் மிரட்டுவதானது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானதும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதுமாகும். அத்துடன் இத்தகைய செயலானது தமிழ் மக்களின் ஜனநாயக செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைப் போடுவதாகவே அமைகின்றது" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக