16 பிப்ரவரி, 2011

பருத்தித்துறை கடற்பரப்பில் 112 இந்திய மீனவர்கள் கைது






யாழ். பருத்தித்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்த 112 இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டனர். அவர்களது 18 இழுவைப் படகுகளையும் இழுத்து வந்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் பருத்தித்துறைமுனைக் கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.

இந்திய மீனவர்கள் கடந்த சில நாட்களாக இலங்கைப் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பதால் இலங்கை மீனவர்களின் வலைகள், மீன்பிடி உபகரணங்கள் சேதமாக்கப்பட்டு, மீனவர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்றுப் பிற்பகல் பருத்தித்துறைமுனை மீனவர்கள் இணைந்து அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 112 பேரையும் சுற்றிவளைத்துப் பிடித்து கரைக்கு அழைத்து வந்தனர். இவ்வாறு கரைக்குக் கொண்டுவரப்பட்டவர்கள் இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் வேதாரணியம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அழைத்துவரப்பட்ட இந்திய மீனவர்கள் பருத்தித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லலித் புஸ்ஸல்லகே தலைமையிலான குழுவினர் குறிப்பிட்ட பகுதிக்கு விஜயம் செய்து இந்திய மீனவர்களை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

இதேநேரம், காரைநகர், மாதகல் கடற் பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் இலங்கை மீனவர்களின் வலைகள் அறுத்து சேதமாக்கப்படுவதாக யாழ். மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜத் தலைவர் எஸ். தவரட்ணம் தினகரனுக்குக் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக