6 டிசம்பர், 2010

கொழும்பு நகர் வாழ் மக்களுக்கு தொடர்மாடி வீட்டுத்திட்டம்: பாதுகாப்பு செயலாளர்

கொழும்பு நகரில் சட்டவிரோதமான குடியிருப்புக்களில் வாழும் மக்களுக்கு தொடர்மாடி வீடமைப்புத் திட்டங்கள் அமைத்துக் கொடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ''சுஜாதா ஜயவர்தன" நினைவுக் கருத்தரங்கில் ''கொழும்பு நகரின் அபிவிருத்தித் திட்டம்" என்ற தொனிப்பொருளில் உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

''கொழும்பு நகரில் சட்டவிரோத குடியிருப்புக்களில் வாழும் மக்களுக்கு கொழும்பு நகருக்குள்ளேயே அடிப்படை வசதிகளுடனான தொடர்மாடி வீடமைப்புத் திட்டங்கள் அமைத்துக் கொடுக்கப்படும். சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வீடுகளில் சுமார் 70 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இதனால் நகரில் பாரிய நெருக்கடிகள் தோன்றியுள்ளன.

இம்மக்கள் தமது வாழ்வாதாரத்தை நகரிலேயே தேடிக் கொள்கின்றனர். எனவே இவர்களை நகரிலிருந்து அப்புறப்படுத்த முடியாது.

எதிர்வரும் 2 வருடகாலப் பகுதிக்குள் 30 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்து முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்தோடு நகரில் உள்ள அரசாங்க அலுவலகங்கள் அனைத்தும் பத்தரதுல்லையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் செத்சிரிபாய இரண்டாம் கட்டிடத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளன" என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக