27 நவம்பர், 2010

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் வைப்பிலிட்ட தொகையினை பட்டியலிட்ட ஜனாதிபதி



யுத்தத்தின் இறுதிக் காலகட்டத்தில் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வந்த தமிழ் மக்கள் முகாம்களில் அமைக்கப்பட்ட வங்கிகளில் வைப்புச் செய்த பணம் மற்றும் நகைகளின் விபரங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துடனான சந்திப்பின்போது எடுத்துக்கூறியுள்ளார்.

இராமநாதன் முகாமில் அமைக்கப்பட்டிருந்த வங்கியில் 400 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் மனிக்பாம் முகாமில் 973 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் கிளிநொச்சியில் 1.43 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் முகாம்களில் அமைக்கப்பட்டிருந்த இலங்கை வங்கியில் 500 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேபோல் மாங்குளத்தில் 650 பேரின் கணக்குகளில் 278 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இதனைவிட இராணுவம் வன்னியில் கைப்பற்றிய தங்கம் வங்கிகளில் 16 பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பெறுமதி 400 மில்லியன் ரூபா எனவும் இராணுவத்தினர் 800 மில்லியன் ரூபா பணத்தினை கைப்பற்றி வங்கியில் வைப்பிலிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இந்தச் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேறிய நிலையில் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தினர் கோரிக்கை விடுத்தபோதே ஜனாதிபதி புள்ளிவிபரங்களுடன் இவற்றைத் தெரிவித்ததாக சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்க்கட்சியொன்றின் தலைவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக