2 நவம்பர், 2010

பொன்சேகா மன்னிப்பு கோரவேண்டும் எனும் கோஷமானது பதவியை பாதுகாக்கும் துதிப்பாடல் : ஐ.தே.க

அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்தும் அதேநேரம் இருக்கின்ற பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவுமே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் மன்னிப்புக்கோர வேண்டும் என்று அமைச்சர்களும் எம்.பி.க்களும் துதி பாடிக்கொண்டிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளரும் எம்.பி. யுமான கயந்த கருணாதிலக்க நேற்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கயந்த எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,

முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா இந் நாட்டுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்த சிறந்ததொரு இராணுவ வீரராவார். இவ்வாறான வெற்றி வீரனை சிறைக்குள் தள்ளுவதற்கு அரசாங்கம் செயற்பட்டது.

இருந்த போதிலும் அவரை விடுவித்துக் கொள்ளும் முயற்சியில் பௌத்தபீடம் உட்பட மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகள், நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. இந்த நிலையில் அரசாங்கத்தின் அமைச்சர்களும் எம்.பி. க்களும் தமது பதவிகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அரசாங்கத்துக்கு துதி பாடுகின்றனர்.

இதற்காக சிறையில் அடைபட்டுள்ள சரத் பொன்சேகா செய்யாத குற்றத்துக்காக ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோர வேண்டுமென கோஷமிடுகின்றனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கூட பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா) மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறியிருக்கின்றார். ஆனால் அமைச்சர்கள் எவரும் பிரதியமைச்சர் மன்னிப்புக் கோர வேண்டும் என்று இதுவரையில் கூறவில்லை.

சரத் பொன்சேகா மன்னிப்புக் கோருமளவில் அவர் எந்த குற்றத்தையும் புரியவில்லை.

அவர் இந்நாட்டுக்கு ஆற்றிய சேவையைக் கருத்திற்கொண்டு அரசாங்கமே அவரை விடுதலை செய்ய வேண்டும். அதனை விடுத்து அர்த்தமற்ற கதைகளை கூறிக் கொண்டிருப்பது அவசியமற்றதாகும்.

பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கே இருக்கின்றது. இதனை இன்று மக்கள் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக