22 செப்டம்பர், 2010

ஜனாதிபதி மஹிந்தவின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கட்டார் முழு ஆதரவு கட்டார் எமிர் கலிபா அல்தானி




இலங்கையில் சமாதானம் ஏற்பட்டுள்ளதையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்துவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கட்டார் பூரண ஆதரவு வழங்குமென கட்டாரின் எமிர் கலிபா அல்தானி கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 65ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கட்டாரின் எமிர் கலிபா அல்தானிக்கும் இடையே (இலங்கை நேரப்படி) செவ்வாய்க்கிழமை (21) காலை இடம்பெற்ற சந்திப்பின் போதே கட்டாரின் எமிர் கலிபா அல்தானி இவ்வாறு கூறினார்.

இலங்கையில் நீண்ட காலம் நிலவி வந்த பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்ததையிட்டு முதலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாராட்டுத் தெரிவித்த கலிபா அல்தானி அது முழு உலகத்துக்கும் ஒரு முன்னுதாரணம் என்று குறிப்பிட்டார்.

கட்டார் அரசுக்கு சொந்தமான ழினிமி எரிவாயு நிர்மாண நடவடிக்கையை இலங்கையிலும் ஆரம்பிப்பதற்கு முழு ஆதரவும் தருவதென இந்த சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இரு நாடுகளுக்கிடையில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கலிபா அல்தானி ஜனாதிபதியிடம் வாக்குறுதியளித்தார்.

கட்டாரில் உள்ள சுமார் 95 ஆயிரம் இலங்கையர்களின் நலன் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டார் எமிரிடம் கேட்டறிந்தார். அச்சமயம் கட்டாரில் உள்ள இலங்கை சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த அவர்களுக்காக பாடசாலையொன்றை அமைப்பதற்கு கலிபா அல்தானி இணக்கம் தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது நிலவும் சமாதான சூழலில் கட்டார் தொழிலதிபர்கள் இலங்கையில் முதலீடு செய்ய மிகவும் ஆர்வமுடன் இருப்பதாக குறிப்பிட்ட கலிபா அல்தானி அவர்களுக்கு எவ்வாறான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருமாறு ஜனாதிபதியுடன் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் இலங்கையை இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் கண்காணிப்பில் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுப்பது உகந்தது என்று நம்புவதாகவும் அவ்வாறான ஒரு வாய்ப்பை இலங்கைக்கு பெற்றுத்தர தமது நாடு ஆவலுடன் இருப்பதாகவும் கலிபா அல்தானி குறிப்பிட்டார்.

இலங்கை வெளியுறவு அலுவலர்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரட்ன, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் இச்சந்திப்பின் போது உடனிந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக