22 செப்டம்பர், 2010

புதுக்குடியிருப்புப் படுகொலைகளின் 20ஆவது ஆண்டு நிறைவு

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி 17 பொதுமக்கள், முஸ்லிம்களால் படுகொலை செய்யப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியிலுள்ள நினைவுத் தூபிக்கருகில் ஆசிரியர் வரதன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்தின்,

"இந்த நினைவுகூரும் நிகழ்வு பற்றி இனரீதியாக யாரும் பர்க்கக் கூடாது. மறக்க முடியாத, காலத்தால் அழியாத ஒரு நிகழ்வை நினைவுகூரும் போது அதன் அடிச்சுவடுகள், வரலாறுகள், அதன் பதிவுகள் புரட்டிப் பார்க்கப்படுகின்றன.

இம்மண்ணில் இந்த நிகழ்வு அனுஷ்டிக்கப்படுவதன் ஊடாக, இதே செப்டம்பர் மாதம் 1990 ஆம் ஆண்டு, கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற ஏனைய படுகொலைகளும் ஞாபகத்துக்கு வருகின்றன. அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகம், சத்துருக்கொண்டான் , புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட படுகொலைகள் வரலாற்றில் தடம் பதிந்துளளன.

புதுக்குடியிருப்பில் இந்நிகழ்வு அனுஷ்டிக்கப்படுவதன் ஊடாக ஏனைய இரு நிகழ்வுகளையும் நான் புரட்டிப்பார்க்கிறேன்.

அப்பாவித் தமிழ் மக்களின் படுகொலை என்பது காலத்தால் அழியாத, எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மாறாத வடுவாகவே இருக்கும். இவை அனைத்தையும் ஞாபகப்படுத்துவதன் மூலம், எமது வரலாறுகளைப் புரட்டிப் பார்ப்பதன் மூலம் எதிர்காலத்தில் எமது நோக்கம் நிஜமாகும்" என்றார்.

வெளிநாடு சென்றிருந்த அரியநேத்திரன் நாடு திரும்பியதும் கலந்து கொண்ட முதலாவது நிகழ்வு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக